நடேசனின் கொலைக்கு இந்த அரசாங்கம் நீதி வழங்கும் என்பது ‘மக்களின் எதிர்பார்ப்பு’

0
7
Article Top Ad

இருபத்தொரு வருடங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த தமிழ் ஊடகவியலாளருக்கு தற்போதைய ஆட்சியில் நீதி கிடைக்கும் என பொதுமக்கள் நம்புவதாக தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

”கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கிடைக்காத நீதி, ரணில் ஆட்சிக் காலத்தில் கிடைக்காத நீதி, மைத்திரி ஆட்சிக் காலத்தில் கிடைக்காத நீதி அனுர அரசாங்கத்தின் காலத்திலாவது கிடைக்க வேண்டுமென மக்கள் நினைக்கின்றார்கள். கைது செய்யப்படுகின்றவர்கள் முறையான விசாரணைக்கு உட்படுத்தி மனித குலத்திற்கு எதிராக அவர்களால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும், அவர்களால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய உண்மையை, குறிப்பாக நடேசனின் படுகொலை பற்றிய உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். அதுதான் நாங்கள் விடுக்கும வேண்டுகோள். இந்த பகிரங்க வேண்டுகோள் தொடர்பில் அவதானம் செலுத்தி குற்றவாளியை இந்த சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும். அதன் மூலமாக ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை ஊடக தர்மத்தை பாதுகாக்கின்றீர்கள் என்ற விடயத்தை உறுதிப்படுத்த வேண்டுமென கோருகின்றேன்.”

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் அரசாங்க இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

மே 31, 2004 அன்று மட்டக்களப்பு நகரில் அரச ஆதரவு பெற்ற துணை இராணுவப் படையான கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்ட, இதுவரை நீதி கிடைக்கப்பெறாத, மூத்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனை நினைவு கூற தெற்கிலிருந்து பல ஊடகவியலாளர்கள் மே 31 அன்று மட்டக்களப்பிற்குச் சென்றிருந்தனர்.

தெற்கின் தமிழ் ஊடக ஒன்றியத்தின் (TMA) முன்னாள் பிரதித் தலைவருமான நடேசனை நினைவு கூர தெற்கில் உள்ள எந்தவொரு ஊடக அமைப்பும் அல்லது நிறுவனமும் எந்த நடவடிக்கையும் எடுத்ததா என்பது தெரியவில்லை.

மட்டக்களப்பில் உள்ள காந்தி பூங்காவின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தின் முன் ஐயாத்துரை நடேசனின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சங்கம் மற்றும் தெற்கைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்கள், இலங்கையில் கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர்

மே 31, 2004

‘நெல்லை நடேசன்’ என பிரபலமாக அழைக்கப்படும் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன், மே 31, 2004 அன்று காலை மட்டக்களப்பில் உள்ள தனது அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW), பின்னர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை வகித்த விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான கருணா குழுவினரை இந்தக் கொலைக்குக் குற்றம் சாட்டியது.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதித் தலைவர் நடேசனின் கொலையைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் உள்ள பல தமிழ் ஊடகவியலாளர்கள் இப்பகுதியை விட்டு வெளியேறவோ அல்லது தங்கள் உயிருக்காக வெளிநாடு செல்லவோ கட்டாயப்படுத்தப்பட்டனர்.

மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட நடேசனின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சங்கம் ஆகியன முந்தைய அரசாங்கங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே, லசந்த விக்ரமதுங்க, தர்மரத்னம் சிவராம் மற்றும் பிரகீத் எக்னாலிகொட உள்ளிட்ட சர்வதேச கவனத்தை ஈர்த்த ஊடகவியலாளர்களுடன் தொடர்புடைய பல வழக்குகளை மீண்டும் விசாரிப்பதாகக் கூறியிருந்தாலும், அண்மைய காலங்களில் அதன் முன்னேற்றம் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here