அரச ஊழியர்கள் பழைய பழக்கவழக்கங்களைக் கைவிட்டு புதிய பழக்கவழக்கங்களைத் தழுவ வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், அவ்வாறு மாறாவிட்டால், தனது அரசாங்கம் மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இன்று (05) நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
“பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்” முக்கிய கருப்பொருளை முதன்மைப்படுத்தி “முளைப்பதற்கு இடமளிப்போம்” என்ற தொனிப்பொருளில் இம்முறை சுற்றாடல் தின நிகழ்வு இடம்பெற்றது.
இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, பொதுவான தேசிய உணர்வின் மூலம் பூமியில் அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நமது தலைமுறைக்கு உள்ளது என்றும், தேசிய ஒற்றுமையை உருவாக்க சுற்றாடலைப் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
நாட்டின் அழகிய சுற்றுச்சூழல் அமைப்பை அழித்த துயரத்திற்கு, இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தின் செயல்கள் காரணமாக அமைந்தன என்றும், அந்த சகாப்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போது அரச அதிகாரிகள் அதற்கேற்றவாறு மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதல் தொடர்பாகவும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்ததோடு, இப்பிரச்சினைகளை தீர்த்து சுற்றாடலை மீட்டெடுத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதற்கான பொறுப்பு ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு என்றும் குறிப்பிட்டார்.