யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மயானப் பகுதியில் மேலும் 45 நாட்கள் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சிந்துபாத்தி மயானப் பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மனித புதைகுழியாக பிரகனடப்படுத்துமாறு நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டவைத்திய அதிகாரியினதும் தடயவியல் நிபுணரதும் அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த வழக்கில் கடமையாற்றும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மற்றும் தொல்பொருள் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோரின் மேற்படி அபிப்பிராய அறிக்கையில் மூன்று விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
- அகழ்வு இடம்பெறும் இடத்தில் 1.6 அடி அளவிலேயே மனித என்பு எச்சங்கள் அடையாளப்படுத்தக்கூடியதாக உள்ளது .
- குழப்பமான சூழலில் முறையற்ற வகையில் மனித என்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளன.
- ஆடைகளோ அல்லது தனிப்பட்ட அணிகலன்களோ குறித்த இடங்களில் காணப்படவில்லை.
இதனடிப்படையில், இது சட்டவிரோதமான இரகசியமான புதைகுழியாக இருக்கலாம் எனவும் தொடர்ந்தும் பல மனித எச்சங்கள் அடையாளப்படுத்தபட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான அகழ்விற்கு அனுமதி கோரப்பட்டது. இன்றுடன் (07) முதலாம் கட்ட அகழ்வுப் பணி முடிவடைகின்ற நிலையில், இந்த அனுமதி கோரப்பட்டது. அதன் பிரகாரம், எதிர்வரும் 45 நாட்களுக்கு அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.