உள்ளூராட்சி மன்றங்களில் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைப்பதாக நாங்கள் எங்கும் சொல்லவில்லை. எமக்கு அதிகூடிய ஆசனங்கள் உள்ள சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என இலங்கை தமிழரசுக் கட்சியில் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
அண்மையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானத்திற்கும், ஈழமக்கள் ஜனநாயக்க் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள சுமந்திரன், எந்தெந்த சபைகளில் அதிகூடிய ஆசனங்கள் உள்ளதோ, அந்தக் கட்சிக்கு நிர்வாகத்தை அமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கட்சிகள் என்றில்லாமல், தமிழ் பேசுகின்ற கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்றே தாம் கோரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
ஆட்சியமைப்பதற்கான ஆதரவு கோரிக்கையை தமது கட்சி வெளிப்படையாகவே முன்வைத்திருந்ததாக குறிப்பிட்ட சுமந்திரன், கட்சியின் தீர்மானத்தின் பிரகாரம் ஏனைய கட்சிகளுடன் பேசியுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.