விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் ஆயுதமோ போதைப்பொருளோ இல்லை – இலங்கை சுங்கம்

0
7
Article Top Ad

சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமைக்கு அரசாங்கமும் அழுத்தம் கொடுத்ததாக அண்மைய நாட்களாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் சட்டவிரோத பொருட்கள் காணப்பட்டதாக பாராளுமன்றத்திலும் கருத்துக்கள் பரிமாறப்பட்ட நிலையில், குறித்த கொள்கலன்களில் சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்கிடமான எதுவும் கொண்டு வரப்படவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். இன்று (08) விசேட ஊடக சந்திப்பினை நடத்தி இவ்விடயத்தை அவர் கூறியுள்ளார்.

அந்தக் கொள்கலன்களை விடுவிப்பதற்கு முன்னர், இறக்குமதி ஆவணங்களில் உள்ள அனைத்து ஆவணங்களையும் பரிசோதித்து, இந்தக் கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சுங்கத் திணைக்களம் பின்பற்றிய நடைமுறைகளால், குறித்த கொள்கலன்களில் எந்தவொரு சட்டவிரோதப் பொருட்களும் இல்லை என தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொள்கலன்களில், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், பிளாஸ்டிக், நூல் வகைகள், இரசாயனப் பொருட்கள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், விலங்கு உணவு, இயந்திர வகைகள், பூச்சிக்கொல்லிகள், சீமெந்து, இரும்புக் குழாய்கள், உரம், பலகை போன்றவைதான் இருந்தன. இந்தக் கொள்கலன்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவை. இதுதவிர, இந்தோனேசியா, ஹொங்கொங், சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, தென் கொரியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகளிலிருந்தும் இந்தக் கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.

இந்தக் கொள்கலன்களை விடுவிக்கும்போது நாங்கள் பின்பற்றிய நடைமுறைகளால், இறக்குமதியாளர்கள் சுங்கத்திற்கு அறிவித்த பொருட்கள் மட்டுமே இந்தக் கொள்கலன்களில் இருந்தன என நாங்கள் நம்புகிறோம். இந்தப் பொருட்களை விடுவிக்கும் இறக்குமதி ஆவணங்களில் உள்ள அனைத்து ஆவணங்களையும் பரிசோதித்த பின்னரே இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன என மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட மேலும் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்கள் இருக்கலாம், தங்கம் இருக்கலாம், அல்லது போதைப்பொருள் இருக்கலாம் என்று கூறப்பட்டாலும், இந்தக் கொள்கலன்களில் அவை எதுவும் இல்லை என நம்பிக்கையுடன் கூற முடியும் என சுட்டிக்காட்டிய மேலதிக சுங்கப் பணிப்பாளர், தற்போது இது சர்ச்சையாக மாறியுள்ளதால் இலங்கை சுங்கத் திணைக்களம் இதற்காக ஒரு பிந்தைய தணிக்கை (Post-Clearance Audit) நடத்த முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

பிந்தைய முடிவு பிரிவு ஏற்கனவே தணிக்கையை மேற்கொண்டு வருவதாகவும், நிதி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு ஒன்று இந்த முழு செயன்முறையையும் விசாரித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுங்கப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் இந்தக் குழுவிடம் சென்று விளக்கங்களை அளித்துள்ளனர் என்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் விபரங்களை வழங்கியுள்ளோம் என்றும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட கூறியுள்ளார்.

முறையான பரிசோதனைகள் ஏதுமின்றி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்களை விடுவிப்பதற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க உத்தரவிட்டதாக தெரிவித்து, இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் பிவிதுறு ஹெல உறுமய கட்சி ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here