செம்மணி என்பது தமிழர் வரலாற்றில் துயர்மிக்க கதையைக் கூறும் ஒரு அடையாளச் சின்னமாகும். செம்மணி என்றதும் நினைவிற்கு வருவது கிரிஷாந்தியின் படுகொலை. 1996 ஆம் ஆண்டு சுண்டுக்குழி மாணவி குமாரசுவாமி கிரிஷாந்தி, செம்மணி பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதுடன், அவரது தாயார் மற்றும் சகோதரன் உட்பட மேலும் சிலர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.
செம்மணியில் மனிதப் புதைகுழி இருப்பதாக, கிரிஷாந்தி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ வீரர் தெரிவித்தமைக்கு அமைவாக பின்னர் அங்கு அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டில் சுமார் 15 மனித என்புக்கூடுகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.
கிரிஷாந்தி கொலைவழக்கில் மரண தண்டனை தீர்ப்பினை எதிர்கொண்ட இராணுவ வீரரான சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி கிராமத்திற்கு அருகில் உள்ள புதைகுழிகளில் சுமார் 300-400 உடல்கள் புதைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். எனினும், அகழ்வில் மேலதிக உடல்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும், சோமரத்ன ராஜபக்ஷ மற்றும் ஏனையோரால் முதலில் கூறப்பட்ட புதைகுழிகள் எதுவும் இல்லை என்று “உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள்” ஏகமனதாக தீர்மானித்ததாக இலங்கை அரசாங்கம் கூறியது. எனினும், சர்வதேச கண்காணிப்பின் கீழ் வெளிப்படையான அகழ்வுப்பணி முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்போதிலிருந்து வலுப்பெற்று வருகின்றது.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சித்துபாத்தி புதைகுழி
கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக சித்துபாத்தி பகுதியில் குழிகள் வெட்டப்பட்ட போது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அங்கு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதில், 17 முழுமையான என்புக்கூடுகளும் பகுதியளவான என்புத்தொகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அகழ்வின் போது அங்கிருந்த சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.
சுமார் 20 வருடங்களை அண்டிய காலப்பகுதியில் உயிரிழந்தவர்களின் எலும்புக்கூடுகளே இங்கு இவையென தெரிவிக்கப்படுகின்றது.
ஆடைகளோ அணிகலன்களோ இல்லை – பெண்களும் சிறுவர்களும் உள்ளடக்கம்!
உயிரிழந்த உடல்கள் சாதாரணமாக புதைக்கப்படும்போது, அங்கு உக்கிய நிலையில் ஆடைகள் காணப்படுவது வழமை. ஆனால், ஆடைகளோ எவ்வித அணிகலன்களோ இருந்தமைக்கான எவ்வித சான்றுகளும் அங்கு இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.
அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளில் 14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரின் எலும்புக்கூடும் உள்ளடக்கம். பெண்களின் எலும்புக்கூடுகளும் உள்ளடக்கம். இவை ஒழுங்கற்ற நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் மற்றும் குவியலாக புதைக்கப்பட்டுள்ளமையானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் வடபுலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களா? எதற்காக கொலைசெய்யப்பட்டனர்? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
அவசர அவசரமாக புதைக்கப்பட்டனரா?
கல்லறைகள் மற்றும் புதைகுழிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ், அந்தந்த பிரதேசத்தின் நில அமைப்பினை பொறுத்து ஆழத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை மாநகரநபை அல்லது அதற்கென ஒதுக்கப்பட்ட சபை கொண்டுள்ளது. எனினும், 4 அடிகளுக்கு மேல்தான் இலங்கையில் வழமையாக சடலங்கள் புதைக்கப்படுகின்றன.
ஆனால், சிந்துபாத்தியில் 1.6 அடி அளவிலேயே மனித என்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆகையால், வேறு இடங்களில் கொலைசெய்யப்பட்டு, இங்கு கொண்டுவந்து அவசர அவசரமாக புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. சிந்துபாத்தி மாத்திரமன்றி, செம்மணியை சுற்றியுள்ள பல பிரதேசங்களில் அகழ்வினை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகின்றது.
ஊடகம் மற்றும் சர்வதேசத்தின் அவதானிப்பு
செம்மணி குறித்த விடயங்கள் குறிப்பாக தென்னிலங்கை ஊடகங்களில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இவ்விடயத்தை மூடி மறைக்க பார்க்கின்றனரா அல்லது மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்பவில்லையா என சமூக ஊடகங்களில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில் இவ்விடயம் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது. அதாவது, அகழாய்வுப் பணியின் போது சர்வதேச விதிகளைப் பின்பற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக் கொண்டுள்ளது. அத்தோடு, அகழ்வுக்கு போதுமான வளங்கள், குடும்பங்கள் மற்றும் ஊடகங்களை கண்காணிக்க அனுமதிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையை பேணுதல் மற்றும் அகழாய்வு நடைபெறும் இடத்தினை பாதுகாத்தல் ஆகிய மூன்று விடயங்களை சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த அகழ்வுப் பணியினை 45 நாட்கள் முன்னெடுப்பதற்கான அனுமதியை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அண்மையில் வழங்கியிருந்தது. சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனின் கோரிக்கையின் அடிப்படையில் இதற்கான செலவு விபரம் சமர்ப்பிக்கப்பட்டு, நீதி அமைச்சின் ஊடாக நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அத்துடன், தொல்லியல் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அபிப்பிராய அறிக்கையை ஆராய்ந்த நீதவான், அவரே தொடர்ந்தும் அகழ்வில் ஈடுபடுவதற்கு அனுமதியும் வழங்கினார்.
நிதி உரிய நேரத்தில் கிடைக்கப்பெறும் பட்சத்தில், ஜூன் பிற்பகுதியில் திட்டமிட்டவாறு இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும்.
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக சம்பந்தப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். நீண்டகாலமாக தாமதமாகி வரும் உண்மை மற்றும் நீதிக்கான தேடலில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்த அகழ்வுப் பணியின் பெறுபேறுகள் வழங்கும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.
செய்தியாக்கம் – கே.கே.