மன்னிப்பின் பெயரில் முறைகேடு – சிறைச்சாலை கட்டமைப்பின் பலவீனமா காரணம்?

0
11
Article Top Ad

நிதி மோசடிக்காக தண்டனை அனுபவித்து வந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதி, 2025 ஆம் ஆண்டு வெசாக் பௌர்ணமி தினத்தன்று அநுராதபுரம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அநுராதபுரம் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர். ஆனால், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அவ்வாறெனில் அவர் விடுவிக்கப்பட்டது எவ்வாறு?

நீதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் இணைந்து தயாரிக்கும் மன்னிப்பு பட்டியலில் எங்கு தவறு நிகழ்ந்துள்ளது என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. அதைவிட சிக்கலானது என்னவென்றால், கடந்த காலத்திலும் இத்தகைய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்ற தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள்

இந்த விடுதலை தொடர்பாக ஜனாதிபதி செயலகம் கடந்த ஜூன் 6ஆம் திகதி குற்றப்புலனாய்வு துறையிடம் முறைப்பாடு செய்ததோடு, குறித்த கைதியின் விடுதலை குறித்து விசாரிக்கவும், இந்த சட்டவிரோத செயல்களுக்கு பொறுப்பானவர்களை கண்டறியவும் பணிப்புரை விடுத்தது.

விசாரணையின் ஒரு பகுதியாக, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மற்றும் அநுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன. பின்னர், ஜூன் 8 ஆம் திகதி மொஹான் கருணாரத்ன கைதுசெய்யப்பட்டதாடு,  ஜூன் 9ஆம் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கைதுசெய்யப்பட்டார். இவர்களுக்கு இன்று விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதுல திலகரத்னவின் பெயர் அதிகாரப்பூர்வ மன்னிப்பு பட்டியலில் இல்லாத போதும், சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டமை, ஜனாதிபதி பொதுமன்னிப்பு நடைமுறை மற்றும் நீதித்துறையின் செயன்முறைகளை தவறாக பயன்படுத்தும் செயல் என்பதை கொழும்பு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய முறைகேடுகள்

விசாரணை தகவல்களின்படி, இதுபோன்ற சட்டவிரோத விடுதலைகள் இதற்கு முன்னரும் 2024 கிறிஸ்மஸ் மற்றும் 2025 சுதந்திர தினத்தின்போதும் நடந்துள்ளதாகவும் சுமார் 60இற்கும் மேற்பட்ட கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டனர் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆட்சியாளர்களின் காலத்திலும் இவ்வாறான முறைகேடு இடம்பெற்றதா என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளதோடு, அவற்றை பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும், சில சிறை அதிகாரிகள் சட்டத்தை மீறி சொத்து குவித்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் தோன்றியுள்ளன. இதனால், அதிகாரிகளின் சொத்து விவரங்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பான பின்னணிகளும் தற்போது விசாரணையின் ஒரு பகுதியாகியுள்ளன.

சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டனம்

முறைகேடான இந்த விடுதலை குறித்து இலங்கை சட்டத்தரணிகள்  சங்கம் (BASL) கடுமையாக கண்டித்துள்ளது. அத்தோடு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு செயற்பாடு, வெளிப்படையான முறையில், நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்குட்பட்டு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் உயர் நீதிமன்றம் சில பொதுமன்னிப்புகளை செல்லுபடியற்றதாக்கியுள்ள முன்னுதாரணங்களையும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இவ்வாறு அதிகாரபூர்வ பட்டியலில் இல்லாதவர்களை விடுவிப்பது சட்ட ஒழுங்குக்கும், நிர்வாக நம்பிக்கைக்கும் பெரும் அச்சுறுத்தலாகும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்த சம்பவம், ஜனாதிபதி மன்னிப்பு நடைமுறையில் நிலவும் குறைபாடுகளையும், இலங்கையின் சிறை நிர்வாக அமைப்பில் அதிகார துஷ்பிரயோகங்கள் எளிதில் நிகழும் சூழலையும் வெளிப்படுத்துகின்றது. இந்த வகையான தவறுகளை தடுக்கும் வகையில், சிறைச்சாலைத் துறையில் கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் மேம்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரி வருகின்றனர்.

குறிப்பாக, முறைகேடாக விடுவிக்கப்பட்டவர்கள் எவ்வாறான பின்னணிகளை கொண்டவர்கள், அவர்கள் பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புடையவர்களா? அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? சிறைச்சாலை நிர்வாகம் மாத்திரம் இதில் தொடர்புபட்டுள்ளதா அல்லது அரசின் உயர்மட்டத்தினருக்கும் இதில் பங்குள்ளதா என்ற பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. முறையானதும் வெளிப்படையானதும் விசாரணைகள் மட்டுமே உண்மையை வெளிக்கொணரும்.

செய்தியாக்கம் – கே.கே.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here