”தமிழ் தேசியத்தின் பால் உண்மையான பற்றுறுதியும் கொள்கைப் பிடிப்பும்,இலட்சியமும் கொண்ட ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இணங்கிப்போக,இறங்கிப்போக இந்த தமிழரசின் சில மன்னர்களுக்கு வரட்டுக் கௌரவமும் மேதாவித் தலைக்கனமும் ஆணவமும் இடம்கொடுக்காமையினால்தான் இராணுவத் துணைக்குழுக்கள்,தமிழினத் துரோகிகள், தமிழ்,இளைஞர் யுவதிகளை படுகொலை செய்தோர்,காணாமல் போகச் செய்தோர் என்று தங்களினாலேயே குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் இரவு நேரத் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் அலுவலகக் கதவுகளை ஆடையின்றி தட்டத் தொடங்கியுள்ளனர்”
ரோம் நகரம் பற்றி எரியும்போது ரோமாபுரி மன்னன் நீரோ பிடில் வாசித்தானாம்.அதாவது தன் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நாட்டின் தலைநகரம் எரிந்து மக்களது உயிரும், அவர்தம் உடைமையும் நாசமாகியதைப் பற்றிய அக்கறையற்று , பிடில் இசைத்தபடி இருந்தான் என்பது பதிவு . ஆக மோசமான, மனிதாபிமானமற்ற , பொறுப்பற்ற ஆட்சியாளனுக்கான ,தலைவனுக்கான முன் மாதிரியாக வரலாற்றில் பதிவாகியுள்ளான் ‘நீரோ’மன்னன்.அது மட்டுமில்லை, ஒவ்வொரு நாசகரமான ஆட்சியாளனையும் குறிப்பிடும் குறியீடாகவும் இருக்கிறான் ‘நீரோ’மன்னன்.
உலகம் முழுவது உள்ள அரசியல்வாதிகளாலும் விமர்சகர்களாலும் பயன்படுத்தப்படும் இந்த மேற்கோளில் வரும் ரோமாபுரியின் நீரோ மன்னன் , போன்றவர்கள் இன்று உலக நாடுகளில் இருக்கின்றார்களோ இல்லையோ இலங்காபுரியில் அதிலும் தமிழர் தாயகப் பகுதியான வடக்கு,கிழக்கு மாகாணங்களில் அரசியல் தலைவர்களாக,தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்களாக,அரசியல்வாதிகளாக தாராளமாகவே இருக்கின்றார்கள்.
தன் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நாட்டின் தலைநகரம் எரிந்து மக்களது உயிரும், அவர்தம் உடைமையும் நாசமாகியதைப் பற்றிய அக்கறையற்று நீரோ மன்னன் ரோமாபுரியில் ”பிடில்” வாசித்தான் ஆனால் .இலங்காபுரியில் உள்ள வடக்கு கிழக்குதமிழர் தாயகத்தில் தமது உரிமைக்காகவும் நிலத்திற்காகவும்,காணாமல்போன தம் உறவுகளுக்காவும் தமிழனப் படுகொலைக்காக நீதி கேட்டும் தமிழ் மக்கள் போராடிவரும் நிலையில் தமிழ்மக்களின் தலைவர்கள் நாமே என மார்தட்டிக்கொள்ளும் ”தமிழரசின் மன்னர்கள்”இந்த அநீதிகளுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் என தம்மாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இணைந்து ”வீணை” இசைக்கத் தொடங்கியுள்ளனர்
தமது ”மேதாவி”தலைக்கனத்தாலும் பதவி மோகத்தாலும் ”நான்’என்ற அகங்காரத்தினாலும் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் எந்தளவு கீழ்த்தரமான நிலைக்கும் இறங்குவார்கள் ,எந்தளவு கீழ்த்தரமான வேலைகளையும் செய்வார்கள் என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. ஆனால் அண்மையில் இலங்கையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் தேசியக்கட்சிகளின் தாய்கட்சி எனப் போற்றப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சியில் தமிழ் தேசிய முகமூடிகளுடன் ”நீரோ”மன்னர்களாக இருந்த சில தலைவர்களின் முகத்திரையை கிழித்து விட்டுள்ளது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தொகுதிவாரி,விகிதாசார முறைமையினால் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட நெருக்கடிகளினாலேயே தமது தமிழ் தேசிய முகமூடிகளை கழற்றி வைத்துவிட்டு,தமிழினத் துரோகிகள், ஒட்டுக்குழு,இராணுவத் துணைக்குழு என தங்களினாலேயே குற்றம்சாட்டப்பட்ட, ஒதுக்கிவைக்கப்பட்ட தரப்புக்களின் காலடி தேடித் சென்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஆதரவு கோரி ‘’வீணை ‘’ இசைக்குமளவுக்கு இந்த தமிழரசின் சில மன்னர்கள் சிரம்தாழ்த்தி தரம் தாழ்ந்துள்ளனர்,
தமிழ் தேசியத்தின் பால் உண்மையான பற்றுறுதியும் கொள்கைப் பிடிப்பும்,இலட்சியமும் கொண்ட ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இணங்கிப்போக,இறங்கிப்போக இந்த தமிழரசின் சில மன்னர்களுக்கு வரட்டுக் கௌரவமும் மேதாவித் தலைக்கனமும் ஆணவமும் இடம்கொடுக்காமையினால்தான் இராணுவத் துணைக்குழுக்கள் , தமிழினத் துரோகிகள் என்று தங்களினாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இரவு நேரத் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் அலுவலகக் கதவுகளை ஆடையின்றி தட்டத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறாக உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் தமிழினத் துரோகி,இராணுவத் துணைக்குழுத் தலைவர்,தமிழ் இளைஞர் ,யுவதிகள் பலர் கொல்லப்பட்டமைக்கும் காணாமல் போனமைக்கும் காரணமானவர், தமிழரசுக்கட்சியின் தலைவராகவிருந்த மாவை சேனாதிராஜாவையே படுகொலை செய்ய முயன்றவர் என்றெல்லாம் இவர்களினாலேயே குற்றம்சாட்டப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் (ஈ.பி.டி.பி.) தலைவர், டக்ளஸ் தேவானந்தாவிடம் அவரது அலுவலகம் சென்று ஆதரவு கோரி அடிபணிந்தமை தமிழ் மக்களையும் தமிழரசுக்கட்சியில் உள்ள தமிழின உணர்வாளர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
உள்ளுராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைக்க ஏனைய தமிழ் தேசியக்கட்சிகள் ஆதரவளிக்கத் தயாராக இருந்த போதும் அவர்களுக்கு எந்தவொரு விட்டுக் கொடுப்பையும் செய்ய மறுத்து அவர்களை நிராகரித்து விட்டு ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானதாவிடம் தமிழரசு சரணாகதி அடைந்துள்ளமைதான் இன்று தமிழ் தேசிய அரசியலையே கொதிப்படைய வைத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் சி.வி.கே சிவஞானம் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அதுமட்டுமன்றி இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் ஒருவர் தன்னைச் சந்திப்பதற்குப் பல தடவைகள் முயற்சி செய்ததாகவும் அதன் பின்னரே சிவஞானம் சந்தித்து ஆதரவு கோரியதாகவும் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக கூறியுள்ளதன் மூலம் ”வீட்டுக்குள்” செல்ல டக்ளஸ் தேவானந்தா விருப்பப்படாத நிலையிலும் ”வீணை” இசைக்க தமிழரசின் சில மன்னர்கள் ஆசைப்பட்டது அம்பலமாகியுள்ளது.
உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் கடந்த 5 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை டக்ளஸ் தேவானந்தாவின் யாழ் நகரிலுள்ள ஸ்ரீதர் திரையரங்க அலுவலகத்தில் சந்தித்துப் பேசியுள்ளமையே தமிழ் தேசிய அரசியலிலும் தமிழரசுக்கட்சிக்குள்ளும் புயலைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரன் எம்.பி., “உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது குறித்து டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடுவது பற்றி கட்சியின் உயர்மட்டக் குழுவில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இந்தச் சந்திப்பு தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேசுவதற்கே இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்திருந்தது.அவ்வாறிருக்கையில் தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதெனில், அது பற்றி கட்சியின் உயர்மட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோன்றே இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் எமது தமிழ்த் தேசியக் கொள்கைக்கு விரோதமாக செயற்பட முடியாது. தமிழ்த் தேசியத் தலைவரின் கொள்கைக்கு எதிர்ப்பாக ஒருபோதும் நாம் செயற்படப் போவதுமில்லை. இது திண்ணம்.கட்சியின் உயர்மட்டக் குழுவின் (மத்தியகுழு) அனுமதியில்லாமல் தனிப்பட்ட முடிவுகள் எதனையும் நாம் ஏற்கவும் முடியாது அனுமதிக்கவும் முடியாது.டக்ளஸ் மற்றும் சிவஞானத்தின் சந்திப்பிற்கு கட்சி பொறுப்பேற்க முடியாது என்பதுடன் இதனை எனது தனிப்பட்ட முடிவின் அடிப்படையில் வன்மையான எதிர்ப்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன் – என சுமந்திரன் -சாணக்கியன் அணி விசுவாசியும் மத்தியகுழு உறுப்பினருமான மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.
ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக்கட்சியின் பதில்தலைவர் சி.வி.கே.சிவஞானம் சந்தித்தமையானது கட்சியின் அடிமட்ட தொண்டனால் கூட ஏற்றுக்கொள்ள முடியாது.அண்மையில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் மற்றும் கருணா ஆகியோர் எங்களுடன் சேர்ந்து தமிழரசுக்கட்சி பயணிக்க வேண்டும் என்றனர்.எனவே தற்போதைய சூழ்நிலையில் சி.வி.கே.சிவஞானம் அவர்களுடனும் கூட்டு சேர வாய்ப்புள்ளது.டக்ளஸ் தேவானந்தாவுடன் கூட்டணி சேர முடிவெடுத்த இவர்களுக்கு பிள்ளையான் – கருணாவுடன் கூட்டணி சேர்வது இலகுவானது என்று தமிழரசுக்கட்சியின் ஆயுட் கால உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்துள்ளார்.இதனை நிரூபிக்கும் வகையில் மட்டக்களப்பில் சில உள்ளுராட்சி சபைகளில் பிள்ளையானின் ஆதரவை தமிழரசு கோரி சில காய் நகர்த்தல்களை செய்துள்ளதாகவும் தகவல்கள் உண்டு.
இவ்வாறாக உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஈ,.பி.டி.பி.யிடம் தமிழரசு ஆதரவு கோரியமைக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழரசுக்கட்சிக்குள்ளும் எதிர்ப்புக்கள் வெளிக் கிளம்பியுள்ள நிலையில் மானிப்பாய் பிரதேச சபையில் ஆட்சியை அமைப்பதற்காக தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியிடம் ஆதரவு கோரிய விடயம் அம்பலமாகியுள்ளது. தமிழரசு கட்சியின் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரே , மானிப்பாய் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் உறுப்பினர் ஒருவரிடம் இவ்வாறு ஆதரவு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.இருப்பினும், கட்சியின் உயர்மட்ட குழுவின் தீர்மானத்துக்கு அமையவே ஆதரவு வழங்குவதா இல்லையா என முடிவு எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் கூறியதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
உள்ளுராட்சிசபைகளில் ஆட்சியமைக்கும் விடயத்தில் தமிழ் தேசியக்கட்சிகளை புறம்தள்ளி தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் ஈ.பி . டி.பி யின் அலுவலகத்தில் அதன் செயலாளரை ஆசனப்பங்கீடு தொடர்பில் சந்திருப்பது ஒரு தமிழின துரோகமாகவும் நீண்ட தியாகங்களை கொண்ட தமிழரசின் வரலாற்றில் ஒரு கறையாகவும் தலைக்கனங்களினாலும் விட்டுக்கொடுப்பின்மையினாலும் தமிழ் தலைமைகள் அழிந்த.அழிக்கப்பட்ட வரலாறு மீண்டும் எழுதப்படுவதையுமே தமிழரசின் சில மன்னர்கள் வீணை இசைக்க ஆசைப்படும் இந்த சந்திப்பு வெளிப்படுத்துகின்றது.
கே.பாலா