பொறுப்புடன் செயற்படுங்கள் – பிரதமரின் வேண்டுகோள்

0
7
Article Top Ad

உயிர்களைப் பாதுகாப்பதை தமது பொறுப்பாக கருதி, வீதி விபத்துகளைத் தடுப்பதற்குப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும், சட்டங்களினால் மட்டுமன்றி சிறந்த தெளிவோடு அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, Clean sri lanka வேலைத்திட்டம் மற்றும் இலங்கை பொலீஸ் இணைந்து ” Take Care, வீதியைப் பாதுகாப்போம்” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட வீதி விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், “வீதி விபத்துகள் இன்று நாட்டில் பெரும் பேரழிவாக மாறியுள்ளன. இதில் கவலைதரும் விடயம் என்னவென்றால், எமக்கு தேவையும் அர்ப்பணிப்பும் இருந்தால் இவை அனைத்தும் தடுக்கப்படக்கூடியவை என்பதாகும்.

வீதி விபத்துகளால் தினமும் ஏழு பேர் இறக்கின்றனர், இந்த துயரத்தை நாம் நிறுத்த வேண்டும். வீதி விபத்துகளில் இறப்பவர்கள், ஊனமுற்றவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்களே. ஒருவரின் தாய், தந்தை, சகோதரன், சகோதரி அல்லது குழந்தை விபத்தில் சிக்கினால், அது அவர்கள் அனைவரையும் பாதிக்கிறது. இந்த விபத்து புள்ளிவிபரங்கள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல, அவை ஒரு பெரிய கதையை எமக்குச் சொல்கின்றன.

வீதி விபத்துகளைத் தடுப்பது என்பது சட்டத்தை கடைப்பிடிப்பது மட்டுமல்ல, மற்றவர்களைப் பற்றி சிந்திக்கும், உயிர்களைப் பாதுகாப்பதை தனது பொறுப்பாகக் கருதும், இரக்கத்துடன் செயற்படும் ஒரு சமூகத்தை உருவாக்குவதும் அவசியம். அரசாங்கம் அத்தகைய அழகான நாட்டை உருவாக்கவே முயற்சிக்கிறது.

தண்டனைக்கு முன் கல்வி, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன் முன்னுதாரணம், குற்றச்சாட்டுக்கு முன் கவனம் ஆகியவை அவசியம்.

பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும், சாரதிகள் உயிர்களைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகள் குறித்து பிள்ளைகளுக்கு தெளிவூட்டுவதைப் போன்றே, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு பொலிஸார் மக்களுக்கு அதுபற்றி விளிப்புணர்வூட்ட வேண்டும்” என தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here