இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி யாழ். மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாநகர சபையின் ஆட்சியை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. அதன் முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் (13) யாழ். மாநகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நடத்தப்பட்ட வெளிப்படையான வாக்கெடுப்பில் விவேகானந்தராஜா மதிவதனிக்கு 19 வாக்குகளும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமாருக்கு 16 வாக்குகளும் கிடைத்தன.
தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட விவேகானந்தராஜா மதிவதனி வெற்றி பெற்றதுடன், பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் தெரிவானார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரித்துள்ளன.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.