ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஈரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், ஈரானிய புரட்சிகர காவல் படைத் தலைவர் ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்டதாக ஈரானின் தஸ்னிம் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
டெஹ்ரானின் வடகிழக்கில் வெடிச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரசு நடத்தும் நூர் நியூஸை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். அணுகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஈரானிய விஞ்ஞானிகளை இஸ்ரேல் குறிவைத்ததாக கூறியுள்ள நெதன்யாகு, தாக்குதல்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்த தாக்குதல்களுக்காக பெரும் விலையை செலுத்தவேண்டியிருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஆயுதப்படைகள் நிச்சயமாக பதிலடி கொடுக்கும் என ஈரானிய செய்தித் தொடர்பாளர் அபோல்ஃபாஸ்ல் ஷேகார்ச்சி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.