ஈரானிய பாதுகாப்பு கட்டமைப்புகள், அணு உலை சார்ந்த நிர்வாக கட்டடங்கள் மீது இஸ்ரேலிய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்றிரவு இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை நோக்கி ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
ஈரான் வீசிய ஏவுகணைகளை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தன. அதில் சில ஏவுகணைகள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் விழுந்துள்ளன. பொதுமக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
மக்கள் உயிரிழந்த மற்றும் காயமடைந்த புகைப்படங்கள் செய்திகளில் வெளிவருகின்ற போதும், எண்ணிக்கை குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் எவையும் வெளியாகவில்லை. எனினும், நூற்றிற்கும் மேலானோர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களை தயாரிப்பதாக ஈரான் மீது பல ஆண்டுகளாக இஸ்ரேல் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. அவ்வாறு ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்தால் அது தங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் அணு ஆயுதங்களுக்கு முக்கிய மூலப்பொருளாக கூறப்படும் யுரேனியத்தை செறிவூட்டும் நடவடிக்கையை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. இதனை கைவிட அமெரிக்கா பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது. அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையிலேயே நேற்றைய தினம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய இராணுவ தளபதிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட 78 பேர் உயிரிழந்தனர் என ஈரான் குறிப்பிட்டுள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 24 மணிநேரத்துக்குள்ளாக மீண்டும் நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும் இஸ்ரேல் ஏவியது.
இந்த சூழலில் தமது நாட்டின் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலை மண்டியிட வைப்போம் என்று ஈரானிய தலைவரான அயத்துல்லா அலி கமேனெய் தெரிவித்துள்ளதோடு, தற்போது பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அழிவுகளை தவிர்க்க அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும். இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் நாங்கள் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம் என்றும் கூறியுள்ளார்.