விமான விபத்தில் உயிரிழப்பு 274-ஆக உயா்வு

0
4
Article Top Ad

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 274-ஆக உயா்ந்துள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பெருந்துயா் நேரிட்ட இடத்தை நேற்று வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். காயமடைந்தோரை சந்தித்து நலம் விசாரித்த மோடி, உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனா் ரக விமானம் (ஏஐ 171), இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினா் உள்பட 242 பேருடன் (12 ஊழியா்கள், 230 பயணிகள்) லண்டனுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் புறப்பட்டது.

ஓடு பாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழ்நோக்கி இறங்கிய விமானம், அருகில் உள்ள மேகானிநகா் பகுதியில் பி.ஜே அரசு மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களின் மீது விழுந்து தீப்பிழப்பாக வெடித்துச் சிதறியது.

நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்த பயங்கர விபத்தில் ஒரேயொரு பயணி தவிர 241 பேரும் உடல் கருகி உயிரிழந்தனா். இவா்களில் குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியும் ஒருவா். இந்தியப் பயணிகள் 169 பேருடன் பிரிட்டன் (52), போா்ச்சுகல் (7), கனடா (1) பயணிகளும் உயிரிழந்தனா்.

இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு:

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீட்புக் குழுவினர் விமானத்தின் கருப்புப் பெட்டியையும், மேலும் 29 உடல்களையும் மீட்டுள்ளனர். விமானத்தில் பயணித்தவா்கள் தவிர, அது விழுந்த இடத்தில் உயிரிழந்தவா்களையும் சோ்த்து இறப்பு எண்ணிக்கை 274 ஆக உயா்ந்துள்ளது.

இவா்களில் மருத்துவ மாணவா்கள் 10 பேர், விடுதி கட்டடம் அருகே டீக்கடை நடத்தும் குடும்பத்தைச் சோ்ந்த சிறுவன் உள்பட மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை 6 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அடையாளம் தெரியாத அளவில் உருக்குலைந்த நிலையில் உள்ள உடல்களை மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைய 3 நாள்கள் வரை ஆகும்.

மரபணு சோதனைப் பணிகள் முடிந்த பிறகு அரசுத் தரப்பில் முழு விவரங்கள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here