“முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் இணைந்து அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கும் நரித்தமான அரசியல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நாங்கள் யாருடனும் கூட்டு சேரவில்லை. எங்களுக்கான ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் சேர்ந்துகொண்டு அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்கும் நரித்தமான அரசியலை நடத்தும் நபர்களாக சிலர் மாறியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சஜித் அணி தொடர்பில் கடந்த காலங்களில் பாரிய விமர்சனங்களை முன்வைத்தவர்கள் அவர்களுடன் சேர்ந்து தமது அரசியலை முன்னெடுக்கும் கேவலமான நிலை உள்ளது.
இப்படியானவர்களே எமக்கு எதிராக போலியான பிரச்சாரத்தை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர்.” – என்றார்.