
தமிழ் மக்களுக்கு எதிராக அரசின் குற்றங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஒன்றினால் தண்டனை விதிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாகக் கருதப்படும் செம்மணி படுகொலைகள் நிகழ்ந்த பிரதேசத்திலேயே புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப் புதைகுழி தொடர்பில் வடக்கினதும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களினதும் கவனம் திரும்பியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் செம்மணி பிரதேசத்தின் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 2025 மே மாதம் 15 ஆம் திகதியிலிருந்து நிதிப் பற்றாக்குறை காரணமாக ஜூன் மாதம் 7 ஆம் திகதி நிறுத்தப்படும் வரை சுமார் 20 பேரின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் செம்மணி பாரிய மனிதப் புதைகுழி, சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கடும் அழுத்தங்களினால் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பிரதேசம் பூராகவும் நூற்றுக்கணக்கான மனித உடல்கள் சட்ட விரோதமான முறையில் புதைக்கப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டபோதிலும், அன்றிலிருந்து இன்று வரை இருந்த எந்த அரசாங்கமும் அது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. இம்முறை சித்துப்பாத்தி பாரிய மனிதப் புதைகுழி வெளிப்பட்டதும் தற்செயலாகவேயாகும். இடைநிறுத்தப்பட்டுள்ள அதன் அகழ்வுப்பணிகளுக்காக நிதியும், பாதுகாப்பும் வழங்குமாறு தமிழ் மக்களின் பிரதிநிதிகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் வழங்கும் அழுத்தம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
செம்மணி பாரிய மனிதப் புதைகுழியை சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப, அகழ்வு செய்து, உடல்கள் மீட்கப்பட்டு, தடயவியல் மற்றும் நீதிமன்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் இலங்கை அரசின் குற்றமாக பல தசாப்த காலமாக புதைக்கப்பட்டுள்ள நிறுவனமயப்படுத்தப்பட்ட குற்றவாளிகளின் பங்களிப்புக்களை அறிந்து கொள்ள முடியும் என்பது நீதிக்காகப் போராடும் சகலரினதும் நம்பிக்கையாகும்.
19 வயதுடைய கிருஷாந்தி குமாரசாமி என்ற பாடசாலை மாணவி 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி செம்மணி பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்யப்பட்டதுடன் அதே நாளில் தன் மகளைத் தேடிச் சென்ற அவரின் தாய் இராசம்மா குமாரசாமி, தம்பியான பிரணவன் குமாரசாமி மற்றும் குடும்ப நண்பரான கிருபாகரன் ஆகியோரையும் கொலை செய்த குற்றம் தொடர்பில் 09 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். 08 இராணுவ சிப்பாய்களும், ஒரு பொலிஸ் சிப்பாயுமே அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். 1997 நவம்பர் மாதம் 18 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமனறத்தில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. நீதிமன்ற நடவடிக்கைகளின் முடிவில் அதாவது 1998 ஜூலை மாதம் 03 ஆம் திகதி குற்றம் சாட்டப்பட்ட 09 பேரும் அது தொடர்பில் குற்றவாளிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டு, நிமல் திஸாநாயக்க, காமினி அபேரத்ன, அண்ட்ரூ சோமவங்ஷ ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அவர்களில் ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் எஞ்சிய மூவருக்கும் 20 வருட சிறைத் தண்டனையும் ரூபாய 50,000/= வீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இராணுவச் சிப்பாய்களான சோமரத்ன ராஜபக்ஷ, ஆர்.எல்.எம். ஜயசிங்க, ஏ.எஸ்.பி.பெரேரா, டி.எம்.ஜயதிலக மற்றும் டி.வி இந்திரஜித் குமார மற்றும் பொலிஸ் சிப்பாயான ஜி. பிரதீப் பிரியதர்ஷன ஆகியோருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. டப்.ஈ.டப்.அல்விஸ், டி.ஜி.முதுபண்டா மற்றும் ஏ.பி. நிஷாந்த ஆகிய இராணுவ சிப்பாய்களுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சோமரத்ன ராஜபக்ஷ மற்றும் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய ஐவரும் தமது தண்டனை உத்தரவை நீக்குமாறு கோரி 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேன்முறையீடு செய்தனர். எனினும் 2004 பெப்ரவரி 03 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் அந்த மேன்முறையீட்டை நிராகரித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது.
1995 ஒக்டோபர் 17 ஆம் திகதி முப்படைத் தளபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் இலங்கையில் ஆயுதப் படையினரால் ஒருங்கிணைத்த நடவடிக்கை ஒன்று வடக்கில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் நோக்கம் ஐந்து ஆண்டுகளாக LTTE இன் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாண தீபகற்பத்தை மீண்டும் அரசின் கட்டுப்பாட்டின் கீழே கொண்டு வருவதாகும். 1996 மே மாத இறுதியாகும் போது யாழ்ப்பாண தீபகற்பத்தின் மக்கள் வசித்த பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தன. தாக்குதல்கள் காரணமாக இலட்சக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருந்ததுடன் வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதில் ஏற்பட்ட பல இடர்ப்பாடுகள் காரணமாக மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பினார்கள். இராணுவ வெற்றிகள் மூலம் யாழ்ப்பாணத்தின் தமிழ் மக்களின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு நிம்மதியைக் கொண்டு வந்ததாக ஆட்சியாளர்கள் நாவளவில் பெருமை பேசினாலும், யதார்த்தமோ வீதித் தடைகள், இராணுவ அடக்குமுறைகள் மற்றும் காணாமலாக்கப்படுதல் போன்றனவாகவே இருந்தன.
யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி கற்ற மாணவியான கிருஷாந்தி குமாரசாமி காணாமலாக்கப்படுதல் உச்சம் தொட்டிருந்த 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி க.பொ த. (உயர் தர) இரசாயனவியல் பரீட்சைக்குத் தோற்றி வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது இராணுவ வண்டியில் மோதி இறந்த தன்னுடைய சம வயதுத் தோழி கணநாதன் தமயந்தியின் மரணத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருக்கும் போது காணாமல் போகிறார். இடைவழியில் அவர் யாழ்ப்பாண நகரிற்கு அருகில் உள்ள கைதடி அருதில் உள்ள செம்மணி வீதித் தடையில் கைது செய்யப்பட்டமையானது அதனைக் கடந்து சென்று கொண்டிருந்த வேறு பயணிகளின் முன்னிலையிலாகும். பின்னர் இராணுவ சிப்பாய்கள் குறித்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்தனர்.
கிருஷாந்தி பாடசாலை முடிவடைந்து வீட்டுக் செல்லும் வழியில் இராணுவ வீதித் தடையில் கைது செய்யப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் மூலம் அறிந்து கொண்ட தாய் தனது மகளைத் தேடி அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு ஓடிச் சென்றுள்ளார். அவ்வாறு தேடிச் சென்ற ஓய்வு பெற்ற பாடசாலை அதிபரான அவரின் தாய், அவருடன் சென்ற 16 வயதுடைய சகோதரன் மற்றும் அயல் வீட்டுக்காரர் ஒருவர் இந்த தேடிச் சென்ற பயணத்தின் பின்னர் காணாமல் போகிறார்கள். அதன் பின்னர் அவர்களைத் தேடிச் சென்றவர்களுக்கு கிடைத்தது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் வழமையாக இராணுவத்தினரால் வழங்கப்படும் பதிலாகும். அதாவது அந்த நான்கு போரையும் தாம் கைது செய்யவில்லை என்பதாகும்.
கொழும்பிலிருந்து வெளியாகும் “வீரகேசரி” பத்திரிக்கை இந்த செய்தியைப் பிரசுரித்ததுடன், செப்டம்பர் 16ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களால் இந்த விடயம் நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி இது தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை மேன்முறையீடு ஒன்றை மேற்கொண்டது.
கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை இன்னொரு காணமல் போதலாக மறைந்து போகவில்லை. அது யாழ்ப்பாண பிரஜைகளை காணமலாக்கிக் கொலை செய்து மண்ணுக்கடியில் ஒழித்து வைத்த இடங்களில் இருந்து வெளியே கொண்டு வருவதை யுத்தம் நிறைவடைவதற்கு முன்னரே ஆரம்பிப்பதற்கு காரணமாக அமைந்தது. வடக்கில் போன்றே தெற்கு வாழ் சமூகத்தையும், சர்வதேச சமூகத்தையும் அதிர்ச்சியடையச் செய்த இந்த மாணவியின் கொலையை காலம் மறக்கடிக்கும் வரை தவிர்த்து இருப்பதற்கு அப்போது நாட்டின் ஆட்சியாளராக இருந்த சந்திரிக்கா அரசுக்கு முடியாமல் போனமை இதற்கான காரணமாகும். அதனால் கொலையாளிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனை வழங்குவதற்கும், அதன்போது மரண தண்டனை வழங்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ வெளிப்படுத்திய செம்மணி பாரிய மனிதப் புதைகுழியை தோண்டி நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பின்னணி ஒன்று உருவானது.
கிருஷாந்தி குமாரசாமி என்ற மாணவியைக் கொலை செய்த குற்றம் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் மேலும் நான்கு சிப்பாய்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் சோமரத்ன ராஜபக்ஷ கொழும்பு உயர் நீதிமன்ற சாட்சிக் கூண்டில் நின்று கிருஷாந்தி குமாரசாமி கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை எனவும், தான் அந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றமற்றவர் எனவும் வாக்குமூலம் வழங்கினார்.
செம்மணி பிரதேசத்தில் பாரிய மனிதப் புதைகுழிகள் இருப்பதாக அவர் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட பின்னர் வெளிப்படுத்தினார். அனேகமாக எல்லா மாலைப் பொழுதுகளிலும் அங்கே பிரேத உடல்கள் கொண்டு வரப்பட்டதுடன், அவற்றைப் புதைக்கும் படி உயர் அதிகாரிகள் வழங்கிய உத்தரவை சிப்பாய்கள் செயற்படுத்தியதாக குறிப்பிட்டார். “நாங்கள் யாரையும் கொலை செய்யவில்லை. நாங்கள் உடல்களை மாத்திரம் புதைத்தோம். 300, 400 உடல்களை புதைத்த இடங்களைக் காட்ட முடியும்” அவர் விபரித்த இடம் அப்போது அவர் பணியாற்றிய செம்மணியாகும்.
அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. மூன்று சந்தர்ப்பங்களில் விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட நீதவான்கள் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்தமை அதற்கான முக்கியமான காரணமாகும். அவர்கள் “வெளி அழுத்தங்கள்” ஏற்படுத்தப்பட்டமையே அதற்கான காரணம் என்று செல்லியிருந்தார்கள்.
1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராஜபக்ஷ யாழ்ப்பாண நீதிமனறத்தில் முன்னிறுத்தப்பட்டார். நீதவான் யாழ்ப்பாணத்திலிருந்து 150 மைல் தொலைவிலுள்ள மன்னார் பகுதியிலிருந்து விமானம் மூலம் அழைக்கப்பட்டிருந்தார். அதன் போது இராணுவத்தினரால் விசாரணைக்காக மக்களை தடுத்து வைத்தல், சித்திரவதை மற்றும் படுகொலை செய்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதவான் முன்னிலையில் மிக நீண்ட வாக்குமூலம் ஒன்றை வழங்கிய சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்தார். உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மாத்திரமே தாம் அந்த உடல்களை புதைத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சித்திரவதை செய்தல் மற்றும் கொலைகளுடன் தொடர்புடைய உயர் இராணுவ அதிகாரிகள் சிலரின் பெயரை அவர் குறிப்பிட்டிருந்தார். தான் உட்பட குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள்ளுக்கு அவ்வாறான 16 இடங்களை அடையாளம் காட்ட முடியும் என்று குறிப்பிட்டிருந்தார். செம்மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் அங்கே அவரால் புதைக்கப்பட்ட ஒரு இடத்தை அடையாளம் காட்டினார். 1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இரானுவத்திரால் கைது செய்யப்பட்டு காணாமல் போன யாழ்ப்பாணத்தில் வாகனம் திருத்தும் இடம் ஒன்றில் பணியாற்றிய இருவரின் எலும்புகள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டன.
ராஜபக்ஷ யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் முன்வைத்த தினத்தில் வெளியிட்ட இலங்கை இராணுவம் மேற்கொண்டதாக சொல்லப்படும் மனிதப் படுகொலைகள், காணாமல் ஆக்கப்படல் தொடர்பான பாரிய மனிதப் புதைகுழிகள் அகழ்வு நடைபெறும் இடம் ஊடகவியலாளர்களுக்கு திறந்து விடப்பட்டது. 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அந்தச் சந்தர்ப்பம் ஏற்பாடு செய்யப்பட்டது. விமானப் படை விமானம் ஒன்றின் மூலம் 40 ஊடகவியலாளர்களில் ஒருவரான பிரியதர்ஷன மதவத்த அவர்கள் உலக சோஷலிஸ இணையதளத்திற்கு விளக்கமான அறிக்கை ஒன்றை வழங்கியிருந்தார்.
செம்மணி பாரிய மனிதப் புதைகுழியைக் காண்பிப்பதற்கு முன்னர் சோமரத்ன ராஜபக்ஷ யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஒரு மணித்தியாலமளவில் சாட்சியம் வழங்கினார் என்று மெதவத்த குறிப்பிடுகிறார்.
“அவருக்குள் ஓரளவு மன அழுத்தம் இருந்ததை அவதானிக்க முடிந்ததாலும், அவர் மிகுந்த நம்பிக்கையுடன் பின்வருமாறு குறிப்பிட்டார். ‘அரியாலையில் மக்களைக் கைது செய்து, அவர்களை சித்திரவதை செய்து, கொலை செய்த முறையை உங்களுக்குக் காட்ட முடியும். “நான் அரியாலை இராணுவ முகாமில் சிவில் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டேன். குடும்பங்களின் பெயர் மற்றும் முகவரிகளைப் பதிவு செய்தல் மற்றும் பயங்கரவாதிகளாக சந்தேகப்பட்டு முகாம்களுக்குக் கொண்டுவரப்படும் இளைஞர்களின் பெயர்களை ஆவணப்படுத்தல் என்னுடைய பணியாக இருந்தது. இதற்காக நாங்கள் இரண்டு பட்டியல்களைத் தயார் செய்தோம். இந்தப் பிரதேசம் அன்று இராணுவ நிர்வாகத்தை கொண்டு நடத்துவதற்காக பொறுப்பான முகாம்கள் தொடர்பில் மனித உரிமைகள் தொடர்பான யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் (UTHR) மூலம் 1999 ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட விசேட அறிக்கை முக்கியத்துவம் மிக்கதாகும்.
“1996 செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி கிருஷாந்தி கொலை நிகழ்ந்ததாக நாம் உறுதியாக உணரும் சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். கொலை நடைபெற்ற செம்மணியானது யாழ்ப்பாண நகரிற்கு கிழக்குத் திசையில் உள்ள பிரதான முகாமான புங்கன்குளம் இராணுவ முகாமின் கட்டுப்பாட்டில் இருந்தது. பாரிய பிரதேசம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்கள் முதலில் புங்கன்குளம் முகாமிற்கு அழைத்து வரப்பட்டதுடன், அங்கு அவர்கள் குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் அநேகமானோர் செம்மணிக்கு அருகில் உள்ள அரியாலை கிழக்கு புலனாய்வு முகாமிற்கு அனுப்பப்பட்டனர். ஒட்டு மொத்தமாக அது குடியிருப்புக்கள் இல்லாத பிரதேசமாகும். அங்கே தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டதுடன் அதிலிருந்து உயிர் தப்பியவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை எமக்குக் கிடைக்கவில்லை.
“செம்மணி வீதித் தடையில் இருந்த இராணுவச் சிப்பாய்களுக்கு இரவு அறிவித்தல் வழங்கப்படும். புலனாய்வு முகாமில் கொடுமைகள் இழைக்கப்பட்டு கொலை செய்யப்பட கைதிகளின் நிர்வாணப்படுத்தப்பட்ட உடல்கள் பின்னர் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு செம்மணிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கேயிருக்கும் சிப்பாய்களின் உதவியுடன் புதைக்கப்படும். கிருஷாந்தி குமாரசாமி வழக்கின் பின்னணியில் உள்ள இந்த சூழ்நிலைகளை யாராலும் கிழித்தெறிய முடியாத மெல்லிய திரையின் பின்னால் மறைந்து எம்மைப் பார்த்துக் கொண்டுள்ளது. பிரதிவாதியின் சட்டத்தரணிகள் விசாரணையில் பங்குகொண்ட சிப்பாய்களின் சாட்சியத்திற்கு இடையூறு ஏற்படுத்தி இறுதி வரை காத்திருக்குமாறு கட்டாயப்படுத்தினர்”.
புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படுவோரது பட்டியலின் அடிப்படையில் அவர்களின் வீடுகளை அடையாளம் காட்டுவதற்காக பிரதேசம் தொடர்பில் இருந்த அறிவின் அடிப்படையில் தானும் பங்குபற்றியதாகவும், அதன் பின்னர் சிப்பாய்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு அவர்களைக் கைது செய்த கொண்டு வந்த சாக்குப் பைகளில் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்களை ஏனைய நபர்களில் இருந்து வேறுபடுத்திக் கொண்டாதாகவும் கோப்ரல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை அழைத்து வந்த அதுகாரிகளாக மேஜர் ஜெனரல்களான வீரக்க்கொடி மற்றும் குணசேகர ஆகிய இருவரைப் பெயரிட்டுள்ளார். அதன் பின்னர் இனங்காணப்பட்ட இளைஞர்கள் முகாம்களுக்கும், வேறு தடுத்து வைத்தல் முகாம்களுக்கும் கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டியல் பெற்றுக்கொடுத்தவர்களாக லெப்டினன் விஜேசிறிவர்தன மற்றும் கப்டன் லலித் ஹேவா ஆகிய இருவரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். சாதாரண தமிழ் இளைஞர்கள் மாத்திரமல்லாது, அரசின் உயர் அதிகாரிகள் சிலர் கூட கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட சந்தர்ப்பங்களும் இருந்துள்ளன என அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடுமைகளுக்கு ஆளாக்குதல், கொலை செய்தல், பாலியல் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பிலும் சோமரத்ன ராஜபக்ஷ, நீதவான் முன்னிலையில் கூறிய விடயங்களும் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ராஜபக்ஷவை முதன்முதலில் பார்த்ததாக எழுதும் ஊடகவியலாளர் மெதவத்த தனது அறிக்கையில், சோமரத்ன ராஜபக்ஷ இராணுவப் படிநிலையை கடுமையாகக் கண்டித்ததாகவும், எந்தத் தயக்கமும் இல்லாமல் இராணுவ அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டதாகவும், அவர்கள் செய்த குற்றங்கள் குறித்து விரிவான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் வலியுறுத்துகிறார்.
“செம்மணி புதைகுழி அமைந்துள்ள பிரதேசத்தில் உடல்கள் வைக்கப்பட்ட 10 இடங்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும். என்னுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றைய நான்கு பேரினாலும் இன்னும் ஆறு இடங்களைக் காட்ட முடியும். கிருஷாந்தி குமாரசாமியைக் கொலை செய்ததாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும், நான் அதைச் செய்யவில்லை. அவளின் சடலத்தைப் புதைக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டார்கள். எனினும் அப்போது நான் புதைத்தது கிருஷாந்தியின் சடலமென நான் அறிந்திருக்கவில்லை” என்று ராஜபக்ஷ தெரிவித்ததாக ஊகடவியலாலராக மெதவத்த குறிப்பிட்டுள்ளார்.
“கிருஷாந்தி குமாரசாமி கொலை தொடர்பில் பொய்யாக என்னைக் குற்றவாளியாக்கியுள்ளமையினால் இந்த விடயத்தை வெளிக்கொண்டு வர நான் முன்வந்தேன். நான் அவளைக் கொள்ளவில்லை. உயர் நீதிமன்ற விசாரணையில் நான் வழங்கிய வாக்குமூலத்தை மீளப் பெற்றுக்கொள்ளுமாறும் இல்லாவிடின் எம் அனைவரையும் அழித்தொழிப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கடிதங்கள் சில கிடைத்திருக்கின்றன. இந்தக் குற்றத்தைச் செய்த இராணுவத்தினர் என்னைக் குற்றவாளியாக குற்றம் சுமத்தி தப்பித்துக்கொள்வதற்கு முயற்சி செய்கிறார்கள். நான் இந்த வாக்குமூலத்தை வழங்குவது நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்காகவோ அல்லது இராணுவத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கத்திலோ அல்ல. எனக்கு நடந்த அநியாயம் காரணமாகவே நான் இதைச் செய்கிறேன். இந்த நாட்டின் நீதிமன்றத்தால் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், நியாயத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்வதற்கும் நான் தயார்” என சோமரத்ன ராஜபக்ஷ நீதவான் முன்னிலையில் வழங்கிய வாக்குமூலத்தை இராணுவத்தின் நிலையை மேலும் வெளிக்கொண்டு வந்து நிறைவு செய்ததாக ஊடகவியலாளர் மெதவத்த குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ கட்டுப்பாட்டு அச்சத்தினிடையே செம்மணி படுகொலைகளை வெளிக்கொண்டு வருவதற்கு கடும் முயற்சி செய்தவர் கிருஷாந்தியின் நண்பியான தமயந்தியின் தந்தையான எஸ்.டி. கணநாதன் ஆவார். யாழ்ப்பாண பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்த 64 வயதுடைய கணநாதன் மாம்பழம் இராணுவ முகாமிற்கு 200 மீற்றர் தொலைவில் உள்ள புங்கன்குளத்தில் தன்னுடைய வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றில் நீர் எடுக்கச் செல்லும் போது துப்பாக்கிதாரிகளினால் கொலை செய்யப்பட்டிருந்தார்.
ஒவ்வொரு பாரிய புதைகுழியும் இலங்கையில் குற்றவியல் நீதியின் கல்லறையின் சின்னமாகும். – சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (AHRC) முன்னாள் நிர்வாக பணிப்பாளர்.