ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் தெரிவிக்க, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ஈரான் கோரியுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதல்களை “பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு பேராபத்து” என ஐக்கிய நாடுகளுக்கான ஈரான் தூதுவரும், ஈரானிய இராஜதந்திரியுமான அமீர் சயீத் இறவானி வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா ஃபோர்டோ வெ(Fordow), நடான்ஸ் (Natanz), இஸ்ஃபஹான் (Isfahan) ஆகிய அணு மையங்களை தாக்கிய விவரங்களை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க தாக்குதல் ஐ.நா. சட்டக் கட்டமைப்பையும், சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தையும் (Non-Proliferation Treaty – NPT) முற்றிலுமாக மீறுகிறது என்று ஈரான் தூதுவர் வலியுறுத்தியுள்ளார். “இந்த சட்டவிரோத நடவடிக்கையை பரிசீலிக்கவும், குற்றவாளிகளை தண்டிக்கவும், சர்வதேச சமூகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
“இந்த தாக்குதல்கள் அனைத்தும் சர்வதேச அணு ஆணையத்தின் (IAEA) மேற்பார்வையிலேயே மேற்கொள்ளப்பட்டன” என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே, ஈரான் – இஸ்ரேல் மோதல் தீவிரமான பின்னணியில், IAEA மீது ஈரான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் மற்றும் உறுப்பினர் நாடுகள் தற்போது இக்கோரிக்கையை பரிசீலித்து வருகின்றன.
அமெரிக்க தாக்குதலுக்குப் பின்னரும் இஸ்ரேலும், ஈரானும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பதால், மத்திய கிழக்கு மீண்டும் பெரும் பதற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபை இவ்விவகாரத்தில் எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதே இப்போது பாரிய கேள்வியாக உள்ளது.