ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களை விமானத்தாக்குதல் மூலம் முற்றாக அழித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி “அற்புதமான இராணுவ வெற்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று முக்கிய இலக்குகள்
Fordow, Natanz மற்றும் Isfahan எனும் ஈரானின் மூன்று அணுசக்தி செறிவூட்டல் மையங்கள் மீது B-2 stealth bomber ரக விமானங்கள் மற்றும் டோமாஹாக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. முக்கியமான Fordow தளத்தில் மட்டுமே ஆறு பதுங்கு குழி குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ட்ரம்ப் உரை: “Fordow is gone”
தாக்குதலுக்குப் பின்னர் உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப், “Fordow இப்போது இல்லை. ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. இப்போது எமது அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாட்டிற்குத் திரும்பியுள்ளன” என கூறியுள்ளார். தமது சமூக வலைத்தளத்திலும் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க இராணுவம் போன்றதொரு இராணுவம் உலகில் எங்கும் இல்லையென்றும் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலின் நோக்கம் ஈரானில் ஆட்சி மாற்றம் அல்ல என ட்ரம்ப் விளக்கம் அளித்தார். “எங்கள் நோக்கம் – அணுசக்தி அபாயத்தை முற்றிலுமாகக் கட்டுப்படுத்துவது. ஈரான் அமைதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் எதிர்கால தாக்குதல்கள் மிகவும் பயங்கரமாக இருக்கும்,” என்று எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலின் பங்களிப்பு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த தாக்குதலுக்கான அமெரிக்க ஆதரவை வரவேற்கும் வகையில், “நாம் இதுவரை எந்த அணியும் செயற்படாத ஒரே குழுவாக செயற்பட்டோம்” என தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாக ஈரானின் ஏவுகணை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் தொடர்ச்சியாக அமெரிக்கா நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
பதிலடி – பதற்றம்
கடந்த 13ஆம் திகதி இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் ஈரானின் மூன்று ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடியாக, ஈரானும் டெல் அவிவ், ஹைபா மற்றும் டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியது. இதனையடுத்து, இஸ்ரேல்–ஈரான் இடையிலான போர் இன்றுவரை தொடர்கிறது.
இந்த தாக்குதல் உலகளாவிய அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, மெக்சிகோ போன்ற நாடுகளும் அமைதியை வலியுறுத்தி வருகின்றன.
ஏற்கனவே இஸ்ரேல்-ஈரான் தாக்குதல் காரணமாக உலகளவில் பொருளாதார ரீதியில் தாக்கங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமெரிக்கா நேரடியாக இந்த தாக்குதலில் ஈடுபட்டமை, மேலும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.
அமெரிக்கா இந்த தாக்குதலில் பங்கேற்குமாக இருந்தால், முன்னொருபோதும் சந்திக்காத விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் உயர் தலைவர் அலி கமேனி கூறியிருந்தார்.
ஆனால், “எங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மத்திய கிழக்கு பகுதியை கொடுமைப்படுத்தும் நாடாக ஈரான் உள்ளது. ஈரானுக்கு அமைதி அல்லது சோகம் ஆகியவற்றில் ஒன்றில் ஒரு தேர்வு மட்டுமே உள்ளது. இன்னும் பல இலக்குகள் குறிவைக்கப்பட்டுள்ளன. விரைவாக அமைதியை ஏற்படுத்தாவிட்டால் மற்ற இலக்குகளை துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் தாக்குவோம்” என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.