ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இன்று (23) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
26ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரை நேரில் சந்திக்கவுள்ளார். மேலும் பல உயர்மட்ட தலைவர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவும், நாடு முழுவதும் நிலவும் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக நேரடியாக அறிந்துகொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
அவரது பயணத்தில், ஸ்ரீ தலதா மாளிகைக்கு செல்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்போது மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களையும் சந்திப்பார். அத்துடன், அவர் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களைச் சந்திக்கவுள்ளார்.
இந்த பயணம், இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை சர்வதேச ரீதியில் நேரடியாக மதிப்பீடு செய்வதற்கும், எதிர்காலத்தில் உடனடி மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்துப் பேசுவதற்குமான முக்கியமான வாய்ப்பாக கருதப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டின் பின்னர் ஐ.நா. உயர்நிலை ஆணையர் ஒருவர் இலங்கை வந்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.