மத்திய கிழக்கின் தற்போதைய பதற்றமான போர் சூழ்நிலை காரணமாக உலகளவில் எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இலங்கையில் தற்போதைக்கு எரிபொருள் நெருக்கடி இல்லையென்றும், எதிர்காலத்தில் ஏற்பட்டால் அதற்கான நடவடிக்கைகள் குறித்து தயாராகி வருவதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கான ஈரானின் முயற்சிகள், உலக எரிபொருள் சந்தையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக எண்ணெய் போக்குவரத்தின் 1/6 பங்கு நடைபெறும் இந்த நீரிணையின் மூடல், நாளொன்றுக்கு 17.2 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை கொண்டுசெல்லும் போக்குவரத்தில் தடை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்குகிறது.
இதன் காரணமாக, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 சதவீதம் அதிகரித்து சுமார் 79 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இதேபோல், எதிர்காலத்தில் எண்ணெய் விலை மேலும் உயரும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இலங்கையின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது நாட்டின் உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை எனத் தெரிவித்துள்ளதுடன், எரிபொருள் விநியோக சங்கிலியில் இடையூறுகள் ஏற்பட்டால் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் மாதிரிகளை பரிசோதிக்கும் திட்டம் உள்ளதாகவும் கூறியுள்ளது.