யாழ்ப்பாணம் அரியாலை – சிந்துபாத்தி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வேண்டும், நீதிமுறைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக, தமிழ் இளையோர் இயக்கமான மக்கள் செயல் குழுவின் ஏற்பாட்டில் இன்று (23) தொடங்கி ஜூன் 25ஆம் திகதி வரை செம்மணி வளைவு பகுதியில் ‘அணையா விளக்கு’ எனப் பெயரிடப்பட்ட போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவரது கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் நடத்தப்படுவதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“இருண்டு கிடக்கும் செம்மணி மீதே ஒளி வீச வேண்டும் என்பதற்காக, நாங்கள் இந்த அணையா விளக்கை ஏற்றுகிறோம். இந்த இனப்படுகொலையின் உண்மை வெளிவர வேண்டும். இது ஒரு தலைமுறை நினைவுகளை மற்ற தலைமுறைக்கு கொண்டு செல்லும் செயற்பாடு,” என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
“இந்த அணையா விளக்கை பலப்படுத்த வேண்டும். அது தமிழர் விடுதலை போராட்டத்துக்கான ஒளியாகட்டும்,” என போராட்டக்குழுவினர் அனைத்து தமிழர் சமூகத்தினரிடமும் ஆதரவை கோரியுள்ளனர்.
ஐ.நா. உயர் ஆணையாளர் வடக்கு கிழக்கிற்கும் விஜயம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போராட்டம் நடைபெறுகின்றது.