ஈரானில் உள்ள மூன்று அணு உற்பத்தி தளங்களை அமெரிக்கா தாக்கியதை அடுத்து, போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில், கட்டாரில் உள்ள அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியப் பிரஜைகள் மறு அறிவித்தல் வரும் வரை வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், தேவையின்றி வெளியில் நடமாட வேண்டாம் என்றும், வீட்டில் இருப்பதே பாதுகாப்பானது என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு தொடர்ந்து, பிரிட்டன் அரசாங்கமும் அதேபோல் எச்சரிக்கை அறிவித்துள்ளது.
பல நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ள நிலையில், கட்டார் தனது வான்பரப்பை மூடியுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் ஈரானால் தாக்கப்படலாமென தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கட்டாரில் உள்ள அல-உதெய்த் விமானப்படைத் தளம், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளமாகும். இங்கு சுமார் 8,000 அமெரிக்கர்கள் வசித்து வருகின்றனர். மொத்தமாக, மத்திய கிழக்கில் 40,000க்கு மேற்பட்ட அமெரிக்க படையினர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, கட்டாரிலுள்ள பல பல்கலைக்கழகங்களும் தங்களது மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளன.