அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்குதல்: பல நாடுகள் வான்வெளியை மூடின

0
8
Article Top Ad

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மும்முரமாகும் பதற்றங்களைத் தொடர்ந்து, கட்டாரில் தோஹாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ தளமான அல்-உதெய்த் விமானப்படைத் தளத்தை ஈரான் நேற்று இரவு ஏவுகணை மூலம் தாக்கியுள்ளது.

ஈரானின் தகவலின்படி, அமெரிக்கா ஈரானில் உள்ள அணுசக்தி தளங்களை வான்வழி தாக்குதல் மேற்கொண்டதற்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பின்னர் வளைகுடா நாடுகள் முன்னெச்சரிக்கையாக தங்கள் வான்வெளிகளை மூடத் தொடங்கியுள்ளன. கட்டாரைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளும் தற்காலிகமாக வான்வெளியை மூடியுள்ளன. குவைத் ஏர்வேஸ் அனைத்துவிதமான விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கப்பற்படை பிரிவு அமைந்துள்ள பஹ்ரைனும், பாதுகாப்பு காரணங்களுக்காக தனது வான்வெளியை மூடியுள்ளது. FlightRadar24 உள்ளிட்ட கண்காணிப்பு அமைப்புகள், ஐக்கிய அரபு அமீரகமும் தற்போது வான்வெளியை மூடியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளன. இந்த வான்வெளி மூடல்கள் சர்வதேச விமான போக்குவரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய விமானப் பாதுகாப்பு அமைப்பான Safe Airspace, தற்போது ஏற்படும் ஏவுகணை மற்றும் ட்ரோன் நடவடிக்கைகள், குறிப்பாக அமெரிக்க வர்த்தக விமானங்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here