தமிழர் பிரச்சினை – சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோள்

0
6
Article Top Ad

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் இலங்கைக்கு மேற்கொள்ள உள்ள விஜயத்தை முன்னிட்டு, ஐந்து முன்னணி சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அவரது பயணத்தில் முக்கிய மனித உரிமை பிரச்சனைகளை முன்வைக்கக் கேட்டுக் கொண்டுள்ளன.

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச சட்ட நிபுணர் ஆணையம் (ICJ), ஆசிய மனித உரிமைகள் மேம்பாட்டு மன்றம் மற்றும் இலங்கை அமைதி மற்றும் நீதிக்கான இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து கையெழுத்திட்டுள்ள இக்கடிதம், இலங்கையில் நடந்த போர் குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்காததை குறித்த கரிசனைகளை முன்வைத்துள்ளது.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேர்தலுக்கு முந்தைய காலத்தில் பல வாக்குறுதிகளை அளித்திருந்தாலும், ஆட்சிக்கு வந்த பின்னர் வருங்கால நீதிக்கான உறுதி குறைவாகவே காணப்படுவதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் “OSLAP” (Sri Lanka Accountability Project) எனப்படும் பொறுப்புக் கோரல் திட்டம் வழியாக சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சாட்சிகள் எதிர்காலக் குற்றவியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படக்கூடியவை எனவும், இந்த திட்டத்தின் நடவடிக்கைகள் தொடர வேண்டிய அவசியம் அதிகமாகியுள்ளது எனவும் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

வோல்கர் டர்க் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன. அவற்றில் குறிப்பாக, இலங்கையில் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறிய சம்பவங்களுக்கு பொறுப்புக்கூற அரசைத் தூண்டுதல், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களை நேரில் சந்தித்தல், செம்மணி போன்ற இடங்களை பார்வையிடுதல், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய அரசை வலியுறுத்தல் மற்றும் அதன் நடைமுறையை உடனடியாக நிறுத்தக் கோரல், நிலம் கையகப்படுத்துவதை நிறுத்துதல், 2019 இல் நடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, சட்டப்படி குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here