இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்,” அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு முழுமையாக ஒப்புக்கொண்டன. இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்த உடன் சுமார் 6 மணி நேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தை ஆரம்பிக்கும். அதனைத் தொடர்ந்து 12 மணி நேரத்தில் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை தொடங்கும். அடுத்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ஈரான் இடையே 12 நாட்கள் நடைபெற்ற போரின் முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இந்த போர் பல ஆண்டுகளாக நடந்து மத்திய கிழக்கையே அழித்திருக்க வேண்டிய ஒரு போராக மாறி இருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அதுபோல நடக்காது. இஸ்ரேல் ஈரானை கடவுள் ஆசிர்வதிப்பார். மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவையும் கடவுள் ஆசிர்வதிப்பார். உலகை கடவுள் ஆசிர்வதிப்பார்” எனக் கூறியிருக்கிறார்.
எனினும், தற்போதைக்கு போர் நிறுத்தம் குறித்த எந்த ஒப்பந்தமும் இல்லை என ஈரான் மறுத்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்” இப்போதைக்கு போர் நிறுத்தம் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும். தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணி வரை ஈரானின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தன. ஈரான் மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்தினால் நாங்களும் தொடர மாட்டோம். கடைசி நிமிடம் வரை எதிரியின் தாக்குதலுக்கு பதில் தர தயாராக இருக்கும் ஆயுதப்படைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.
இதன் மூலம் மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இஸ்ரேல்-ஈரான் தொடர் தாக்குதலின் பின்னர், கடந்த 22ஆம் தேதி அதிகாலை ஈரான் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்த ஈரான், கட்டாரில் உள்ள அமெரிக்க விமான படைப்பு சொந்தமான அல்-உதெய்த் விமான தளத்தை குறி வைத்து நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளது.