இலங்கைக்கு வருகைத்தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், இன்று செவ்வாய்க்கிழமை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தார்.
இதன்போது மனித உரிமைகள் தொடர்பான பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் பதிவிட்டிருப்பதாவது,
“தொடர்ச்சியான ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்தினேன். புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து நல்லிணக்க முயற்சிகள் மற்றும் மனித உரிமைகள் மீதான முன்னேற்றம் தொடர்பிலும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரிடம் விளக்கினேன்” என பதிவிட்டுள்ளார்.
மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நாட்டை வந்தடைந்தார்.
2016 ஆண்டுக்குப்பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு வருவது இதுவே முதன்முறையாகும்.
அவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது.