கிட்டு பூங்காவில் “விடுதலை” குறியீட்டு போராட்டம்

0
185
Article Top Ad

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள கிட்டு பூங்காவில் “விடுதலை” எனப்படும் குறியீட்டு போராட்டம் நேற்று இடம்பெற்றது. இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இப்போராட்டம் நடைபெற்றது.

“குரலற்றவர்களின் குரல்” எனும் செயற்பாட்டாளர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், சிவில் சமூக உறுப்பினர்கள், முன்னாள் அரசியல் கைதிகள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

குற்றச்சாட்டுகள் இல்லாமலும் விசாரணையின்றியும் பல ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளுக்கு தமது  ஒற்றுமையைக் காட்டும் வகையில், இவர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, சிறை வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்காட்சி ஒன்று ஏற்பாடாகி, தமிழ் கைதிகள் எதிர்கொள்ளும் கொடூரமான வாழ்க்கை நிஜங்களை துல்லியமாக வெளிப்படுத்தியது.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, “விடுதலை மரம்” பிரச்சாரத்திற்கு தேவையான நீர் சேகரிப்பு விழாவும் இடம்பெற்றது. தமிழர் வாழும் இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட இந்த நீர்,  விடுதலை கோரி நடப்படும் மரத்திற்கு ஊற்றப்படும். இது நீதி மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கூட்டு எதிரொலியாக கருதப்படுகிறது.

மேலும், இந்நிகழ்வில் முன்னாள் அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீஸ் எழுதிய “துருவேறும் கைவிலங்கு” என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. 15 ஆண்டுகள் சிறையில் கழித்த அவரின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நினைவுக் குறிப்பு, பலரும் சந்தித்த கொடுமைகள் மற்றும் நீண்ட கால சிறைவாசத்தின் பின்னணியை வெளிக்கொணர்கின்றது.