அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷகடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மக்கள் சந்திப்பில் பேசிய அவர், அதிகரித்து வரும் மக்களின் அதிருப்தி மற்றும் அரசாங்கத்தின் தோல்விகள் காரணமாக, அது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அடக்குமுறையைத் தழுவி வருகின்றதாக குற்றம்சாட்டினார்.
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலைமை, அதன் கொள்கைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாகவும், அதனை மறைக்க கருத்து வேறுபாடுகளை அடக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார். குறிப்பாக, இளைஞர் மன்றங்கள் மற்றும் பல இளைஞர் அமைப்புகளை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை அவர் கண்டித்தார்.
இந்த நடவடிக்கைகள் கட்சி ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் எதிர்ப்பை ஒடுக்கவும் திட்டமிடப்பட்டவை என சுட்டிக்காட்டினார். மேலும், கிராமங்கள், விகாரைகள், தேவாலயங்கள் மற்றும் கோயில்கள் போன்ற கிராமப்புற பகுதிகளில் நடைபெறும் அபிவிருத்தித் திட்டங்களைத் தடுப்பது, அரசாங்கத்தின் திட்டமிட்ட முயற்சியாகும் என்றும், இது சமூக அடித்தளங்களை பலவீனப்படுத்தி அதிகாரப் பிடியை பலப்படுத்தும் மூலோபாயத்தின் ஓர் அங்கம் என்றும் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

