மித்தெனிய பகுதியில் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்ட பெருமளவிலான இரசாயன மாதிரிகளில், பெரும்பாலானவை ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படக்கூடியவை என தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை உறுதிப்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 6 ஆம் திகதி, மித்தெனிய பகுதியில் உள்ள காணியொன்றிலிருந்து சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்களை கண்டுபிடித்தனர். “கெஹெல்பத்தர பத்மே” மற்றும் “குடு நிலங்க” என அழைக்கப்படும் நபர்கள் நாட்டினுள் ஐஸ் தயாரிக்க இந்த இரசாயனங்களை பயன்படுத்தி வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட பெக்கோ சமன் மீது நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவ்விடயம் குறித்து தேடப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 20 இரசாயன மாதிரிகள், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டன. அதில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் உள்ளன என்பது கடந்த 12ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தற்போது பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் மேலும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கு அனுமதி வழங்கியது யார், பின்னால் உறுதுணையாக இருந்தவர்கள் யார் என்ற விபரங்கள் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

