ஐ.தே.க மாநாட்டில் ஒன்றுகூடிய எதிர்கட்சிகள் – பின்னணி என்ன?

0
303
Article Top Ad

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா, அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது. அரசியல் பிரமுகர்களிடையே ஒற்றுமையைக் குறிக்கும் வகையில் “ஒன்றாக ஒன்றுபடுவோம்” என்ற கருப்பொருளுடன் இந்த நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. முன்னர் பிளவுபட்டிருந்த எதிர்க்கட்சிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள ஒன்றிணைந்தன, இது அரசியல் ஒற்றுமையின் தருணத்தைக் குறிக்கிறது.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு காரணமாக, சமீபத்திய அரசியல் சூழ்நிலைகள், குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது குறிப்பிடப்படுகிறது. இதை “அரசியல் அடக்குமுறை” என்று எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ள நிலையில், அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைய அவர்களுக்கு உந்துதல் கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள், இது வெறும் தேர்தல் உத்தி அல்ல, ஜனநாயகத்தையும் அரசியல் சுதந்திரத்தையும் காப்பதற்கான போராட்டம் என குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, இந்த ஒற்றுமை, வெறும் தேர்தல் உத்திகளை விட, தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் அரசியல் அணுகுமுறைக்கு எதிரான பொதுவான எதிர்ப்பில் உருவாகியுள்ளது. அரசியல் அச்சுறுத்தல்கள், குறிப்பாக தங்கள் தலைவர்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சமும், ஆளும் கட்சியின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையும், எதிர்க்கட்சிகளின் கூட்டு நிலைப்பாட்டை தூண்டியுள்ளது என்பது பொதுவான கணிப்பாகும்.

அதற்காக எதிர்வரும் மாதங்களில் எதிர்த்தரப்பு பல்வேறு கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பது தெளிவாகின்றது. கட்சித் தலைவர் ரணில், 1000 பேரணிகளை நடத்துவது தொடர்பாக நேற்று மேடையில் குறிப்பிட்டிருந்தார்.

மக்களின் நிலைப்பாடு

ஜனநாயக சுதந்திரங்களைப் பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சி என எதிரணியினர் குறிப்பிட்டாலும்கூட, நாடு நெருக்கடிகளை சந்தித்த போது ஒன்றிணையாத கட்சிகள் தற்போது ஒன்றிணைவதற்கான காரணம் என்ன என்று மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தற்போதைய அரசாங்கத்தில் தொடர்ச்சியாக பல அரசியல் தலைவர்களும் அரச உயரதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். பலரது சொத்துக்கள் வெளிப்படுகின்றன. குற்றச்செயல்களில் ஈடுபட்டோர் படிப்படியாக சிக்குகின்றனர். இவற்றுடன் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புண்டு என பரவலான கருத்துக்கள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் அவை வெளிவரக்கூடும் என்று எதிர்பார்ப்பதோடு, அவற்றை மூழ்கடிக்கும் நடவடிக்கையாக இந்த ஒற்றுமை காணப்படுகின்றதா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

தேர்தலும் கூட்டணியும்

இலங்கையில் விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்தவேண்டும் என்ற  கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணி, முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஒன்றுபட்ட முன்னணி அமைக்கும் பட்சத்தில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து பெறும் வாக்குகள் மற்றும் ஆசனங்கள், பல மாகாண சபைகளில் ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியை விட அதிகமாக இருக்கக்கூடும். இதனால், அதிகாரத்தைத் தக்கவைக்க கூட்டணிகள் அமைக்க வேண்டிய நிலை தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படலாம்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இலங்கையின் அரசியல் பரபரப்பிலும், வரவிருக்கும் மாகாண சபை தேர்தலிலும் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இந்த கூட்டணியின் செயற்திறன், ஜனநாயகத்தின் நிலைப்பாட்டையும், எதிர்கட்சிகளின் எதிர்கால செயற்பாடுகளிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதை பொதுமக்களும்  அரசியல் வல்லுநர்களும் அவதானித்து வருகின்றனர். எதிர்கட்சிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள், நாட்டின் அரசியல் சூழலைப் புதிய திருப்பத்திற்கு அழைத்துச் செல்லுமா அல்லது புதிய குளறுபடிகளுக்கு வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதில் மக்களின் தெரிவு எவ்வாறு அமையப்போகின்றது என்பது விசேட அம்சமாகும். காரணம், தகவலறிந்த தீர்மானங்களை எடுப்பதற்கும், பிரித்தறிந்து செயற்படுவதற்கும் எமது மக்களும் பழகிக்கொண்டு வருகின்றனர். ஆகவே, காலாகாலமாக முன்னெடுக்கப்படும் அரசியல் நிகழ்ச்சிநிரலும், பிரித்தாளும் கைங்கரியமும் இந்த முறையும் கைகூடுமா என்று பார்ப்போம்.

செய்தியாக்கம் – கே.கே.