இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சடுதியாக அதிகரிக்கின்றது. இன்று (17) 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.
அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 இலட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் தங்கத்தின் விலை இந்தளவு சடுதியாக நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
உலகளாவிய பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் காரணமாக முதலீட்டாளர்கள் அதிக தங்கத்தை வாங்குகின்றமை போன்ற பல்வேறு காரணிகள், தங்கத்தின் சடுதியான விலை அதிகரிப்பிற்கு வழிவகுத்துள்ளன.

