கிறிஸ்மஸ் பண்டிகைக்குப் பின்னர் கனடாவின் பல பகுதிகளில் குளிர்காலத்தின் கடும் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், கனமழை பனி, பனித்துளிகள், உறைபனி மழை மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக மக்கள் அன்றாட வாழ்க்கையில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
யூகான் மத்திய பகுதி கடந்த சில வாரங்களாக கடும் குளிரில் உறைந்தே காணப்படுகிறது. சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது. காற்றின் தாக்கத்தால் உணரப்படும் குளிர்ச்சி மைனஸ் 50 முதல் மைனஸ் 55 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதுடன், நாளடைவில் நிலைமை சற்றே மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, நியூஃபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடார் பகுதிகளிலும் கடும் பனிப்புயல் நிலவுகிறது. கார்ட்ரைட் முதல் லாஜ் பே வரை பல பகுதிகளில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றுடன் 30 முதல் 50 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
ஒன்ராறியோ மாகாணமும் கடும் வானிலை பாதிப்பிலிருந்து தப்பவில்லை. தெற்கு மற்றும் தென்மேற்கு ஒன்ராறியோ, நயாகரா பகுதி உள்ளிட்ட இடங்களில் அடர்ந்த மூடுபனி மற்றும் வழுக்கலான சாலைகள் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. கிழக்கு ஒன்ராறியோவின் பிக்டன், நபனீ பகுதிகளில் 10 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதுடன், பல இடங்களில் பனியுடன் உறைபனி மழையும் பதிவாகியுள்ளது.
பெருநகர டொராண்டோ பகுதியிலும் கணிசமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், பயணங்களில் கூடுதல் நேரம் ஒதுக்குமாறு சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது. குறைந்த காட்சித்திறன் மற்றும் சவாலான பயண நிலைமைகள் காரணமாக மக்கள் அதிக அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், சிலர் தங்கள் வழக்கமான பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்வதைக் காண முடிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

