கிறீன்லாந்தை கையகப்படுத்தும் முயற்சி: ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்த 100% வரி மிரட்டல்

0
37
Article Top Ad

கிறீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தனது திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஐரோப்பிய நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு 100 சதவீத வரி (Tariff) விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த நிலக்கரி கொள்முதல் முயற்சிக்கு பிரித்தானியா, டென்மார்க் உள்ளிட்ட 7 முக்கிய ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த வர்த்தகப் போர் மிரட்டலை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளர், கிறீன்லாந்தின் எதிர்காலத்தை அந்நாட்டு மக்களும் டென்மார்க் மக்களுமே தீர்மானிக்க வேண்டுமே தவிர, வெளிநாடுகள் அதில் தலையிட முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கிறீன்லாந்து ஒரு விற்பனைப் பண்டமல்ல என்றும், அதன் இறைமை மீது அமெரிக்க ஜனாதிபதியால் எவ்வித செல்வாக்கையும் செலுத்த முடியாது என்றும் டென்மார்க் வெளியுறவுச் செயலாளர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆர்க்டிக் பிராந்தியத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கிறீன்லாந்தை எப்படியாவது வசப்படுத்தத் துடிக்கும் அமெரிக்காவின் இந்த நகர்வு, சர்வதேச இராஜதந்திர உறவுகளில் பாரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி விதிப்பு அமுலுக்கு வரும் பட்சத்தில், அதன் பெறுபேறு உலகளாவிய சந்தையில் பெரும் விலைவாசி உயர்வை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.