ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்
பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சி ஆகிய நகரங்களிலுள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றும் அத்தியாவசியமற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானுடன் நீண்ட எல்லையைப் பகிர்ந்துள்ள பாகிஸ்தானில், குறிப்பிடத்தக்க அளவில் ஷியா முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். ஈரான் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

