மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் குறித்து இலங்கை முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
அலி சப்ரி தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், லெபனான் மற்றும் ஈரான் நாட்டு மக்களுக்காகத் தனது பிரார்த்தனைகளைத் தெரிவித்துள்ளார்.
“யுத்தம் மற்றும் வன்முறைச் சுழற்சியில் சிக்கித் தவிக்கும் சாதாரண குடிமக்கள், தமக்குச் சம்பந்தமே இல்லாத காரணங்களுக்காக பாரிய விலையைச் செலுத்தி வருகின்றனர்,” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு இறையாண்மை உள்ள நாட்டிற்கும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை (Right to defend itself) உண்டு என்பதை ஏற்றுக்கொண்ட அவர், அந்தப் பதிலடியானது அண்டை நாடுகளைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என வலியுறுத்தினார்.
“நாடுகள் தமது அண்டை நாடுகளைத் தெரிவு செய்ய முடியாது. புவியியல் என்பது நிரந்தரமானது, ஆனால் அமைதி என்பது நாம் எடுக்கும் ஒரு தெரிவு,” என அவர் தெரிவித்துள்ளார்.

