சகல மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் யுகத்தை எமது ஆட்சியில் உருவாக்கியே தீருவோம்

0
31
Article Top Ad

“அரசமைப்புச் சட்டம் குறித்து பல அரசியல்வாதிகள் பெரிதாகப் பேசி வரும் இக்காலத்தில், வெறும் கைவாறுகளுடன் சுருங்கிக்கொள்ளாமல், மக்கள் ஆணையால் உருவாகும் ஐக்கிய மக்கள் சக்தி அரசில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சமூக, கலாச்சார, மத உரிமைகள் போன்ற உரிமைகளும் மனித உரிமைகள் அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டு, 220 இலட்சம் மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் யுகத்தை உருவாக்குவோம்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

“எமது நாட்டின் அரசமைப்பில் அடிப்படை உரிமைகளுக்கான தனியான உள்ளடக்க அத்தியாயம் ஒன்று உள்ளது. இந்த அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளே உள்ளடங்கியுள்ளன. பொருளாதாரம், சமூகம், கலாசாரம், மதம், கல்வி, சுகாதாரம் ஆகிய அம்சங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரபஞ்சம் பஸ் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 88 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பஸ், யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கும் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வாறு, பாடசாலைகளுக்கு பஸ்களை வழங்கி வைக்கும் போது, ‘பஸ் மேன்’ என்று இழிவுபடுத்தி, சேறு பூசி, விமர்சிக்கும் பொறாமை கொண்ட ஓர் கூட்டத்தினரும் இந்த வங்குரோத்து நாட்டில் இருந்து வருகின்றனர். இவ்வாறான பஸ்களை வழங்கும்போது தம்மை விமர்சிப்பதை விடுத்து, தமக்குப் போட்டியாக மக்களுக்காக சேவை செய்ய முன்வருமாறே அத்தகையவர்களுக்குக் கூற வேண்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், 76 ஆண்டுகால வரலாற்றில் எதிர்க்கட்சியாக இருந்து, எந்த அரசியல் கட்சியும் செய்யாத பணியை ஐக்கிய மக்கள் சக்தி செய்து வருகின்றது. இந்நாட்டு எதிர்க்கட்சி அரசியலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய கற்பிதங்களைப் போதித்து வருகின்றது. இந்தச் சேவையைக் கண்டு பார்த்துக் கொண்டிருக்க முடியாத கைவாறு அடிக்கும் குழுவொன்று இதனை விமர்சித்து வருகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மேலும் தெரிவித்தார்.