ஐ.நாவில் இலங்கை அரசுக்கு மேலும் ஒரு வருட காலக்கெடு அமெரிக்கா பெற்றுக்கொடுக்கும் என்று சுமந்திரனிடம் தூதுவர் ஜூலி தெரிவிப்பு

0
27
Article Top Ad

 

க்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இலங்கைக்கான ஜூலி சங் தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்தது.

இதன்போது நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளடங்கலாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம், ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து சுமந்திரனிடம் தூதுவர் ஜூலி சங் கேட்டறிந்தார்.

அதேபோன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சுமந்திரன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குதல், புதிய அரசமைப்பு உருவாக்க செயன்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்தல் என்பன உள்ளடங்கலாக சில நேர்மறையான வாக்குறுதிகளை இப் புதிய அரசு வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அதற்குப் பதிலளித்த அமெரிக்கத் தூதுவர், தம்மிடம் ஊழல், மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு அவசியமான தொழில்நுட்பங்கள் இருப்பதாகவும், அதனை அரசுக்கு வழங்கி உதவுவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளமுடியுமா எனவும் இதன்போது அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சுமந்திரன், அரசு அமைப்பதற்குத் தேவையான சாதாரண பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தியால் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புவதாகவும், இருப்பினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தூதுவர், இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.