ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பின்யாமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை, ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த பின்புலத்திலேயே நெதன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஹமாஸுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகம் நெதன்யாகு அறிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை கூடி ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிக்கும் என்றும் நெதன்யாகு கூறியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான ஒப்பந்தம் காஸாவில் போர் முடிவுக்கு வரவும் பணயக்கைதிகளை விடுவிக்கவும் வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தார் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, பல மாத மத்தியஸ்த பணிக்குப் பிறகு, போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அமைதி ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக நேற்று அறிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்கா மற்றும் கத்தார் இடையேயான தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஜனவரி 19ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
ஹமாஸ் முதற்கட்டமாக 33 பணயக்கைதிகளை விடுவிக்கும், பதிலுக்கு இஸ்ரேல் சிறைகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியானது, போர்நிறுத்தத்தின் ஆறு வாரங்களுக்குள் பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிற்கு திரும்புவதற்கும் அனுமதிக்கிறது.
மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் எகிப்தின் அனுசரணையில் பாலஸ்தீனிய அகதிகள் அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்புவார்கள்.
காசாவின் புனரமைப்பு மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார்.
இந்த ஒப்பந்தம் முழுமையான போர்நிறுத்தம், துருப்புக்கள் திரும்பப் பெறுதல் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதை உறுதி செய்யும் என்று பைடன் வாஷிங்டனில் தெளிவுபடுத்தியிருந்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த உடன்பாட்டை ஆசியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்று உள்ளன.
நிம்மதியை வெளிப்படுத்திய அந்த நாடுகள் உடன்பாட்டின் அம்சங்களை இருதரப்பும் மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.
உடன்பாடு எட்டப்பட்டதாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை (ஜனவரி 15) கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது அப்துல் ரஹ்மான் அல் தானி அறிவித்த சில மணி நேரங்களில் ஆசிய நாடுகளின் அறிக்கைகள் வெளிவந்தன.
போர்நிறுத்த உடன்பாட்டை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். 15 மாத படுகொலை இனி முடிவுக்கு வரும் என்று மாலைத்தீவு ஜனாதிபதி முஹம்மது முயிஸு கூறியுள்ளார்.
பாலஸ்தீன மக்கள் தங்களது நாட்டை மறுநிர்மாணம் செய்யக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இந்த உடன்பாடு என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கும் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
காஸாவில் நீடித்த பகைமைப் போக்கு இனி விலகும் என்று நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் தெரிவித்து உள்ளார்.
உடன்பாட்டின் நிபந்தனைகள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய அரசாங்கமும் போர்நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளின் விடுவிப்புக்கான உடன்பாட்டை வரவேற்று உள்ளது.
அது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
“காஸாவில் பாதுகாப்பான, நீடித்த மனிதாபிமான உதவிகளுக்கு இந்த உடன்பாடு வழி அமைக்கும். போர் நிறுத்தத்தையும் பிணை பிடிக்கப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பேச்சுவார்த்தை மற்றும் அரசதந்திர முயற்சிகளின் வாயிலாக அமைதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது இந்தியாவின் கருத்து,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
உடன்பாட்டை வரவேற்ற ஆசிய நாடுகளில் மலேசியாவும் இந்தோனீசியாவும் அடங்கும்.
மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நிடிக்கும் பூசலுக்கு நிரந்தரத் தீர்வும் அமைதியும் காண போர்நிறுத்த உடன்பாடு ஒரு வாய்ப்பு என்ற மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்து உள்ளது.
“பாலஸ்தீன மக்களுக்கு உறுதுணையாக மலேசியா எப்போதும் விளங்கும். உலகின் ஆக மோசமான பூசல்களில் ஒன்றான காஸா போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்த அனைத்துலக சமூகத்துக்கு ஏற்பட்டு இருக்கும் ஒரு வாய்ப்பாக இந்த உடன்பாட்டை மலேசியா பார்க்கிறது,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.