புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) தெரிவித்துள்ளது.
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 1,445,549 பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக பட்டியல் ஒன்றை குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை தயாரித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் இதில் அடங்கிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஆதரிக்காத நாடுகளின் பட்டியல் இதில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இலங்கை சேர்க்கப்படவில்லை.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றப் பின்னர் அமெரிக்க குடிவரவு – குடியகழ்வு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தி வருகிறார். உரிய சட்ட ஆவணங்களின்றி அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களை டிரம்ப் நிர்வாகம் நாடுகடத்தி வருகிறது.
இந்தப் பின்னணியிலேயே இந்தப் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.