நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் காற்றின் தர அளவு ஓரளவு ஆரோக்கியமற்றதாக காணப்படுவதால், இயலுமானவரை முகக்கவசங்களை அணியுமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் அரசாங்கம் அறிவுறுத்துகிறது.
வடக்கிலிருந்து வரும் மாசுபட்ட காற்று இவ்வாறு காற்றின் தரம் குறைவதற்குக் காரணம் என்றும், நாடு முழுவதும் காற்றின் தர அளவுகள் எதிர்வரும் நாட்களில் ஓரளவு ஆரோக்கியமற்றதாக இருக்கும் என்றும் மோட்டார் போக்குவரத்துத் துறையின் வாகன உமிழ்வு சோதனைப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது, குருநாகல், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் உள்ளது.
வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் மிதமான அளவு பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து மாசு காற்று அதிகமாக இலங்கைக்கு வருவதால் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளதாக சில சூழலியல் செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு, கம்பஹா உட்பட நகரமயமான பகுதிகளில் மரங்கள் மற்றும் இயற்கையான சூழல் குறைவாக இருப்பதால் காற்று மாசுபாடு மக்களை பல்வேறு நோய்களுக்கு உள்ளாக்குவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தர்க்க ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனதும் சூழலியல் செயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுகின்றனர்.