கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி, தினக்குரல் மற்றும் யாழ் ஈழநாடு பத்திரிகைகளின் மூத்த ஆசிரியராக பணியாற்றி மறைந்துள்ள பாரதி இராஜநாயகம் பற்றிய நினைவு வணக்க கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.30க்கு வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்க பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள நினைவு வணக்க கூட்டத்திற்கு, வீரகேசரி நாளிதழ் , வார இதழ் பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் தலைமை தாங்குவார்.
தமிழ் – சிங்கள பத்திரிகைகளின் மூத்த ஆசிரியர்கள், பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் இலக்கியத்துறையை சேர்ந்த பலரும் உரையாற்றவுள்ளனர்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான பாரதி, கொழும்பில் சிங்கள ஊடக அமைப்புகளுடன் இணைந்து 2000 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார்.
அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழின் பிரதம ஆசிரியராக ஒரு வருடம் கடமை புரிந்தார்.
35 ஆண்டுகளின் பின்னர் கொழும்பில் இருந்து மீண்டும் யாழ்ப்பாணம் சென்ற பாரதி, தனது சொந்த மண்ணில் மரணிக்கும் வரை வீரகேசரியின் வடபிரபிராந்திய ஆசிரியராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.