உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்ப அனுமதிக்க முடியாது. அதனால் தையிட்டி விகாரை விவகாரத்தை விரைவில் தீர்த்து வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு கூறிய அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
”தையிட்டி விகாரை விவகாரம் விரைவில் முடிக்கப்பட வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை அது ஏற்படுத்தும்.
உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்பவிடக் கூடாது. அதனால் அடிப்படையில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாகுவதை அனுமதிக்க முடியாது.
விகாரை விவாகரத்தில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள், அப்பிரதேச மக்கள், மத தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் முதலிய தரப்பினர்களுடன் விரைவில் பேசவுள்ளோம்.
விகாரை கட்டப்பட்டுள்ள காணியை மாத்திரம் தருமாறும், விகாரையை சுற்றியுள்ள ஏனைய காணிகளை மக்களிடம் மீள கையளிக்கத் தயாராக உள்ளதாகவும் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே, விகாரை விவகாரத்தில் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் அதனை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.