தலைமறைவாகியுள்ள கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக துப்பாக்கிதாரிக்கு உதவி செய்த இஷாரா செவ்வந்தியை கைது செய்ய பொது மக்களின் உதவி இன்னும் தேவை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக, உலகில் எந்தவொரு காவல்துறையாலும் குற்றங்களை மட்டும் கட்டுப்படுத்த முடியாது என்றும், இதற்கு பொதுமக்களின் ஆதரவு தேவை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களின் ஆதரவு
பொதுமக்களின் ஆதரவைப் பெறும் நோக்கத்திலும், அந்த நபருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும், இஷாரா செவ்வந்தி கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு 1.2 மில்லியன் ரூபாய் வெகுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இந்தத் தொகை அதிகரிக்கப்படுமா என்று ஊடகவியலாளர்கள் வினவிய போது, இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க இயலாது என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை
இதேவேளை கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் கைரேகைகள் மற்றும் துப்பாக்கியில் காணப்படும் கைரேகைகள் பொருத்தப்படுமா என ஊடகவியலாளர்கள் வினவினார்கள்.
அதற்கு பதிலளித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர், அவர் நடந்து சென்ற விதம், கையடக்கத் தொலைபேசி, முக அடையாளங்கள் மற்றும் விஞ்ஞான பூர்வ சான்றுகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்த நபர் தான் எனத் தெரியவந்துள்ளது.