ரோஹித் சர்மா மீது விமர்சனம் – இறுதிப் போட்டியில் அவர் என்ன செய்ய வேண்டும்?

0
8
Article Top Ad

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பெரிய அளவில் ஓட்டங்களை குவிப்பதை இலக்காக கொண்டு விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் நாளை தினம் (மார்ச் 9) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஐசிசி சாம்பியன் பட்டத்தை வெல்ல இரண்டு அணிகளும் கடுமையான போட்டியாளர்களாக உள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 25-30 ஓட்டங்கள் எடுத்து அணிக்கு தொடக்கம் அமைத்துக் கொடுத்தால் போதும் என ரோஹித் சர்மா நினைக்கக் கூடாது. பெரிய இன்னிங்ஸ் விளையாடி அதிக அளவில் ரன்கள் குவிப்பதை அவர் இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா 25 ஓவர்கள் வரை துடுப்பெடுத்தாடினால், அணியின் ஓட்ட எண்ணிக்கை 180-200 ஓட்டங்களாக உயரும். இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை எடுத்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். அவ்வாறு செய்தால், இந்திய அணியால் 350 அல்லது அதற்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவிக்க முடியும். ரோஹித் சர்மா அவரது விக்கெட்டினை இழக்காமல் பெரிய இன்னிங்ஸ் விளையாடினால், அவரால் எதிரணியிடமிருந்து ஆட்டத்தை இந்திய அணிக்கு சாதகமாக மாற்ற முடியும்.

ஒரு துடுப்பாட்ட வீரராக 25-30 ஓட்டங்களை எடுத்துவிட்டு திருப்தியடைய முடியுமா? 25-30 ஓட்டங்கள் எடுத்துவிட்டு உங்களது மனம் திருப்தியடையக் கூடாது. நீங்கள் 8 அல்லது 9 ஓவர்களில் ஆட்டமிழக்காமல், 25 ஓவர்கள் மற்றும் அதற்கும் மேலான ஓவர்கள் வரை நிலைத்து நின்று விளையாடினால், உங்களால் போட்டியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

ஒருநாள் போட்டிகளில் தலைவர் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக அதிரடியான தொடக்கத்தை கொடுக்கிறார். ஆனால், அதிரடியாக விளையாடும்போது அடிக்கடி குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறுகிறார். இந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் 41 ஓட்டங்கள் எடுத்ததே, இந்த தொடரில் அவரது அதிகபட்ச ஓட்டங்களாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக ரோஹித் சர்மா 20, 15, 18 ஓட்டங்களை முறையே எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here