இலங்கையின் மூத்த இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடையானது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது தெளிவாகிறதென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜயசூர்ய மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா அண்மையில் தடை விதித்திருந்தது.
இலங்கையில் உள்நாட்டு போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்து இவர்களுக்கு எதிரான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவர்கள் பிரித்தானிவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சொத்துகள் வாங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் மகிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பிரித்தானியா, முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு எதிரான முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர் தொடுக்க முடிவு செய்தது அப்போதைய இலங்கையின் நிர்வாகத் தலைவராக இருந்த நான்தான். அந்த முடிவையே இலங்கை ஆயுதப் படைகள் செயல்படுத்தின” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மூன்று தசாப்த கால புலிகளின் பயங்கரவாதம் 27,965 ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உயிரை மட்டுமல்ல, அரசியல் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களையும் கொன்றுள்ளது.
2008ஆம் ஆண்டில் அமெரிக்க FBIஆல் உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு 2009 இல் தோற்கடிக்கப்பட்டது.
பல்வேறு தரப்பினரின் சட்டரீதியான துன்புறுத்தல்களிலிருந்து அதன் ஆயுதப்படைகளைப் பாதுகாக்க பிரித்தானியா அரசாங்கம் 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் சிறப்புச் சட்டத்தை இயற்றியது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.”
“எனவே, இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் கடமைகளைச் செய்த ஆயுதப் படை வீரர்களை குறிவைத்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் துன்புறுத்தலுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நேரடியாக நிற்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.”
போர் முடிவடைந்த சில மாதங்களுக்குப் பிறகு, போர்க்கால இராணுவத் தளபதி 2010 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக நின்றபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2010 ஜனவரி ஆறாம் திகதி அவருக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டுக்கொண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பதிவான வாக்குகளில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை அந்த வேட்பாளர் பெற்றார். “இது பிரித்தானியா அரசாங்கத்தின் கருத்தையும் மறுக்கிறது.”
“2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி பின்னர் ஜனநாயக அரசியலில் நுழைந்த விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் மீது தடைகள் விதிக்கப்பட்டிருப்பது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழர்களைத் தண்டிப்பதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்பது தெளிவாகிறது.” என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.