ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்க இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார்.
அவர் அநுராதபுரத்திற்குச் சென்று புனித ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு நடத்த உள்ளதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களைத் ஆரம்பித்து வைக்க உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் மோடியின் இந்தப் பயணத்தில் கையெழுத்தாக உள்ளன.
இந்திய வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் இந்திய அரசின் உயர் அதிகாரிகள் பலரும் இந்த விஜயத்தில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது பிரதமர் மோடியை இலங்கை வருமாறு அழைத்திருந்தார். அதன் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெறுகிறது.
இந்தியப் பிரதமர் இறுதியாக 2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகைத்தந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவும் இலங்கையும் வலுவான கலாச்சார மற்றும் வரலாற்று இணைப்புகளைக் கொண்டுள்ளன.இந்த விஜயம் நாடுகளுக்கு இடையிலான வழக்கமான உயர் மட்ட ஈடுபாடுகளின் ஒரு பகுதியாகும், மேலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பன்முக கூட்டாண்மையை ஆழப்படுத்துவதில் மேலும் உத்வேகத்தை அளிக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு மோடியின் இலங்கை பயணம் தொடர்பில் தெரிவித்துள்ளது.