இலங்கையில் புதிய கொவிட்-19 திரிபு தொடர்பில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தொற்றுநோயியல் பிரிவின் தரவுகளின் அடிப்படையில் புதிய திரிபுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிய கொவிட்-19 திரிபு பரவும் அபாயம் இல்லாததால் மக்கள் அச்சம் கொள்ள அவசியமில்லை.
கடந்த சில வாரங்களாக பல ஆசிய நாடுகளில் கொவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, தேசிய அளவில் தயார்படுத்தவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சகம் எடுத்துள்ளது.
நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் கொவிட் – 19 க்கான மருத்துவ மாதிரிகளை சோதிக்கும் ஒருங்கிணைந்த சுவாச கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் தற்போதைய அவதானிப்பின் படி,கொ விட்-19 பாதிப்புகளில் அதிகரிப்புகள் எதுவும் இல்லை.
இலங்கையில் தொற்றுநோய் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை முன்கூட்டியே அடையாளம் காண தேவையான ஆய்வக கண்காணிப்பு அமைப்பும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
மற்ற சுவாச நோய்களைப் போலவே அவ்வப்போது கொவிட்-19 அதிகரிக்கக்கூடும். பொதுமக்களுக்கு இதனால் எவ்வித ஆபத்தும் இல்லை. இருப்பினும், வயதானவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு உள்ளவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தரவுகளின் அடிப்படையில், அடிப்படை சுகாதார நடைமுறைகள் மற்றும் அடிக்கடி கை கழுவுதல், இருமல் மற்றும் தும்மும்போது மூக்கு மற்றும் வாயை மூடுதல் உள்ளிட்டவை எல்லா நேரங்களிலும் பராமரிக்கப்பட வேண்டும்.
பொதுமக்களுக்கு துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை வழங்க சுகாதார அமைச்சு தயாராக உள்ளது. மேலும் தொற்றுநோய் சூழ்நிலைகளை சமாளிக்க மருத்துவமனைகள் தயாராக உள்ளன.
சுகாதார அதிகாரிகள் கொவிட்-19 திரிபுகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து வருவதால் அவர்கள் வழங்கும் தகவல்களுக்கு மட்டுமே கவனம் செலுத்துமாறு சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.