ஜனாதிபதியின் பொதுமன்னிப்பினை தவறாக பயன்படுத்தி கைதியொதுவர் விடுதலை செய்யப்பட்டமை நாட்டில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளதாகவும், சுமார் 60இற்கும் மேற்பட்டோர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அண்மையில் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்துள்ளமையானது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வவுனியா சிறைச்சாலையினை நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர். அத்தோடு, அங்கு தங்கியிருந்து கடமையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலையில் பணியாற்றும் 10 இற்கும் மேற்பட்டவர்களை விசாரணைக்காக அநுராதபுரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகள் சோதனையிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெசாக் தினத்தையொட்டி பொதுமன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கும், ஊழல் மோசடியுடன் தொடர்புடைய கைதி ஒருவரும் விடுவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவர் அநுராதபுரம் சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதி அனுமதி வழங்கிய பட்டியலுக்கு புறம்பாக இது இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஆகியோர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.