கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று

0
6
Article Top Ad

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 191 ஆவது வருடாந்த புனித திருவிழா இன்று 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்றது.

வருடாந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை 3 ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 11 ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவுக்கான நவநாள் வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

இதையடுத்து, நேற்று 12ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு கொழும்பு உயர்மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நற்கருணை பெருவிழா இடம்பெற்றது.

திருவிழா தினமான இன்று 13 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

இதேவேளை, திருவிழா பாடல் திருப்பலிகள் இன்றையதினம் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் தலைமையில் தமிழ் மொழியிலும் காலை 10 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகையின் தலைமையில் சிங்கள மொழியிலும், நண்பகல் 2 மணிக்கு கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர் ஜே.டி. அன்தனி ஆண்டகையின் தலைமையில் ஆங்கில மொழியிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து, புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் இன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து, நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் திருவிழா இனிதே நிறைவடையும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here