இஸ்ரேல் – ஈரான் மோதல்: மனிதாபிமானம் மற்றும் பொருளாதார விளைவுகளின் எதிர்காலம்

0
9
Article Top Ad

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்டகாலப் பகை, ஜூன் 2025 இல் நேரடிப் போராக வெடித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பல தசாப்தங்களில் மிகவும் கடுமையான பகைமை காலகட்டத்தைக் குறிக்கிறது. ஜூன் 13 அன்று ஈரானிய அணுசக்தி மற்றும் இராணுவ தளங்கள் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுடன் தொடங்கிய மோதல், டெல் அவிவ் மற்றும் ஹைஃபா உள்ளிட்ட இஸ்ரேலிய நகரங்களுக்கு எதிராக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் அலைகளால் ஈரான் பதிலடி கொடுத்ததால் வேகமாக அதிகரித்தது. இரு தரப்பிலும் பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. தற்போதைய நிலைவரப்படி ஈரானில் 224 க்கும் மேற்பட்டோர் மற்றும் இஸ்ரேலில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய நிலை

இந்தத் தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்புள்ளதென ஏற்கனவே ஈரான் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தெஹ்ரானில் வசிக்கும் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கட்டுப்படுத்த முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்க மறுத்ததைக் காரணம் காட்டி, அமெரிக்க ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அதிகரித்து வரும் சூழ்நிலைக்கு பதிலளிக்கும் விதமாக, தேசிய பாதுகாப்பு சபையைக் கூட்டுவதற்காக, கனடாவில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிலிருந்து முன்கூட்டியே  அவர் புறப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் வைத்திருக்கக்கூடாது என்றும், இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும் பலமுறை வலியுறுத்தி வரும் ஜனாதிபதி டிரம்ப், தற்போதும் இதனை மீள வலியுறுத்தியுள்ளார்.

பதற்றத்தைக் குறைக்கக் கோரும் ஜி7 கூட்டு அறிக்கையில் கையெழுத்திட ட்ரம்ப் மறுத்துவிட்டார்.  அதற்கு பதிலாக, கடுமையான அணுசக்தி வரம்புகளை ஏற்பதற்கு ஈரானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

டிரம்பின் தற்போதைய அமைச்சரவை அவரது முதல் பதவிக் காலத்தை விட குறைவான கடும்போக்கு தன்மையையே கையாளுகின்றது. அவரது நிர்வாகம் இதுவரை நேரடி இராணுவ நடவடிக்கையைத் தவிர்த்துள்ளதோடு, அதற்கு பதிலாக இராஜதந்திரம் மற்றும் பொருளாதார அழுத்தத்தைப் பயன்படுத்தி வருகின்றது.

இதே சந்தர்ப்பத்தில், இராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பின்னர், தெஹ்ரான் மற்றும் நடான்ஸில் ஈரான் அதன் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

பொருளாதார தாக்கம்

எண்ணெய் உற்பத்தியில் மத்திய கிழக்கு முக்கிய பங்கு வகிக்கின்ற  நிலையில், இந்த மோதலானது உலகளாவிய நிதிச் சந்தைகளை உலுக்கியுள்ளது. தற்போதைய மோதலுக்குப் பின்னர், பிரெண்ட் கச்சா எண்ணெய் 7% க்கும் மேலாக உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு 75 டொலரை தாண்டியுள்ளது.

நீடித்த மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த அச்சங்கள், மேலும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த மோதல் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைய வழிவகுத்தது. 500 பெரிய அமெரிக்க நிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதைக் காட்டும் Standard & Poor’s 500 குறியீடு மற்றும் Nasdaq இரண்டும், ஜூன் 14ஆம் திகதியன்று 1% க்கும் அதிகமாக சரிந்தன. டெல் அவிவ் பங்குச் சந்தை 1.5% சரிந்தது, மேலும் ஆசிய சந்தைகளும் மதிப்பை இழந்தன.

இஸ்ரேல், ஈரான், ஈராக் மற்றும் ஜோர்தானில் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால், விமான வழித்தடங்கள் சீர்குலைந்து கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளன. மோதல்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் காரணமாக, கப்பல்கள் நீண்ட பாதைகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால், கப்பல் கட்டணங்களை அதிகளவில் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் விலைகள் உயர்வது உலகளவில் பணவீக்கத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக எரிசக்தியை பெரிதும் நம்பியுள்ள தொழில்களில் இந்த நிலை ஏற்படலாம். அதே நேரத்தில், மந்தநிலையின் போது பொருளாதாரத்திற்கு உதவ வட்டி விகிதங்களைக் குறைப்பது மத்திய வங்கிகளுக்கு கடினமாக இருக்கலாம்.

இலங்கை பாதிக்கப்படுமா?

மோதல் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளதோடு, இஸ்ரேல் மற்றும் ஈரான் இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடித்து இராஜதந்திர தீர்வுகளைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேலில் சுமார் 20,000 இலங்கையர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.   ஈரானில் குறைவான எண்ணிக்கையில் இலங்கையர்கள் உள்ளனர். இந்நிலையில்,  இலங்கையர்கள் விழிப்புடன் இருக்கவும், பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு அருகில் இருக்கவும், அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறும் டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

எரிபொருள் விநியோகம், தேயிலை ஏற்றுமதி மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்கள் போன்ற முக்கியமான துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு பதிலளிக்க இலங்கை தயாராகி வருகின்றது. இதுவரை, பெரியளவான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும்,  மோதல் தொடர்ந்தால் எண்ணெய் விலை உயர்வு மற்றும் கப்பல் போக்குவரத்து தாமதங்கள் போன்றவற்றால் பொருளாதாரம் பாதிக்கப்படலாம்.

இரு தரப்பிலும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள் வாழ்விடங்களை இழந்துள்ளனர். பதுங்கு குழிகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். உட்கட்டமைப்புகளுக்கு மிகப்பெரிய சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக அந்நாடுகளின் பொருளாதாரத்திலும் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மோதல், நீண்டகால மனிதாபிமான மற்றும் பொருளாதார விளைவுகளைக் கொண்ட ஒரு பெரிய புவிசார் அரசியல் நெருக்கடியைத் தூண்டியுள்ளது. நிலைமை சீராக்க இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும், ஐந்தாவது நாளாகவும் பதற்றம் நீடிக்கின்றது. ஈரானா இஸ்ரேலா என்று இரு நாடுகளுக்கும் இருசாரார் குரல்கொடுத்து வருகின்றனர். ஆனால், ஈரானா இஸ்ரேலா என்பதற்கு பதிலாக, இழக்கப்படுவது மனித உயிர் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும், அதனை தடுப்பதற்கு ஒரு மையப்புள்ளியில் நின்று குரல்கொடுப்பதே மனிதாபிமானமாகும்.

செய்தியாக்கம். கே.கே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here