பிரித்தானியாவின் புதிய வர்த்தக சீர்திருத்தங்கள் – இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு

0
97
Article Top Ad

பிரித்தானியா பல புதிய வர்த்தக சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை உட்பட பல நாடுகளின் பொருட்கள் வரியின்றி அந்நாட்டு சந்தையை அடைய முடியும்.

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, இலங்கைக்கு மிகவும் குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றம் என்பது ஆடைத் துறைக்கான விதிகளை தளர்த்துவதாகும்.

இது இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு பயனளிக்கும். அவர்கள் சந்தையை எளிதாக அணுக முடியும்.

இந்த வரி தளர்வானது இலங்கை ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆடைகளை வரியின்றி பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும்.

இந்த புதிய வர்த்தக நடவடிக்கைகள் இலங்கை பொருளாதாரத்திற்கு, குறிப்பாக ஆடைத் தொழிலுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஆடைத் தொழில் இலங்கைக்கு ஒரு முக்கிய ஏற்றுமதி வருமானமாகும். இது ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.

இதேவேளை, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 30 வீத பரஸ்பர வரியை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வரிவிதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு இலங்கையில் ஆடை உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையின் ஏற்றுமதி வருவாயில் 25 வீதம் அமெரிக்காவிலிருந்து கிடைப்பதுடன், நாட்டின் ஆடைப் பொருட்களில் 70 வீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இவ்வாறாக பின்னணியில் பிரித்தானியா வரியின்றி அந்நாட்டு சந்தைக்குள் நுழையும் வகையில் புதிய வர்த்தக நடவடிக்கைகளை அறிவித்துள்ளதால் அது இலங்கைக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.